நியூயார்க் மேயர் வெறுப்பைப் பரப்புகிறார்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
நியூயார்க் மேயர் மம்தானி பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியவை.
நியூயார்க் நகருக்குள் நெதன்யாகுவுக்கு வரவேற்பில்லை என நியூயார்க் மேயர் ஸோரான் மம்தானி கூறியிருந்தார். அதேபோல, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்டின் கீழ் அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், அவற்றை நிராகரித்துவிட்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற நியூயார்க் நகருக்குச் செல்லவிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நெதன்யாகு நேற்று (ஜூலை 26) அளித்த பேட்டியில், “யூத மக்களின் உண்மைகளுக்காகப் போராட நான் நியூயார்க் வருவேன். ஐ.நா. சபையின் மேடையில் உண்மைகளை உரக்கச் சொல்லவும், இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டணிக்கு ஆதரவாகப் பேசவும் நான் வருகிறேன்” என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மம்தானி பற்றிப் பேசிய அவர், “யூத இனப்படுகொலைக்கு பிறகு யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிக மோசமான படுகொலையான அக்டோபர் 7 தாக்குதலை மம்தானியும் அவரது குடும்பத்தினரும் கொண்டாடினார்கள்.
அவர் இல்லை என்று சொன்னாலும் அடிப்படையில் இஸ்ரேலின் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து தலைகளைத் துண்டித்த, குழந்தைகளை உயிருடன் எரித்த, எங்கள் ஆண்களைக் கொன்ற, 251 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளைத் தங்கள் பிடியில் சிறைபிடித்த ஹமாஸ் கொலைகாரர்களையே மம்தானி ஆதரிக்கிறார்” என்று கூறினார்.
இஸ்ரேல் மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை ஹமாஸ் செய்ததாகக் கூற்இய நெதன்யாகு, இஸ்ரேல் ராணுவத்தின் நோக்கங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் நோக்கங்களுக்கு இடையிலான வேறுபாட்டை குறிப்பிட்டார்.
மேலும், "ஹமாஸ் தான் இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள். அவர்களின் கொள்கை விளக்க ஆவணத்தில் உள்ளபடி இஸ்ரேல் உள்பட உலகில் உள்ள ஒவ்வொரு யூதரையும் அவர்கள் கொலை செய்திருப்பார்கள். அதுபற்றி பகிரங்கமாக அவர்கள் அறிவித்துள்ளனர். எனவே, இனப்படுகொலை குற்றச்சாட்டு எங்களின் எதிரிகளுக்கே பொருந்தும். பொதுமக்களிடையே மறைந்து செயல்படும், ஆபத்தான இடங்களில் பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதையே நாங்கள் செய்கிறோம். உண்மையான குற்றவாளிகள் அவர்களே.
மம்தானி யூதர்கள் மீதான வெறுப்புணர்வைத் தூண்டுகிறார். யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என நியூயார்க் நகர மக்கள் அனைவருக்குமான மேயராக அவர் இருக்க வேண்டும். ஆனால், அவர் ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றொரு பிரிவினரைத் திருப்பி, வெறுப்பை விதைக்கிறார். அவரது பேச்சு நியூயார்க்கில் உள்ள யூத மக்களுக்கு ஆபத்தான சூழலை உருவாக்குகிறது. அவர்களிடம் நான் பேசுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போர்க் குற்றவாளியான நெதன்யாகுவை நியூயார்க் நகரில் வைத்து கைது செய்ய மம்தானி ஆலோசித்து வந்தார். ஆனால், சர்வதேசத் தலைவரைக் கைது செய்யும் அதிகாரம் நியூயார்க் நகரக் காவல் துறைக்கு நேரடியாக இல்லை என்பதை பின்னர் மம்தானி ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்தே, நெதன்யாகு நியூயார்க் நகரம் வருவதற்கு வரவேற்பு இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.
New York Mayor is spreading hate: Israeli Prime Minister Netanyahu in an interview!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.