பதின் வயதினருக்கான சாட்ஜிபிடி ஏஐ அறிமுகம்!
ஓபன் ஏஐ நிறுவனம் பதின் வயதினருக்கான புதிய சாட்ஜிபிடி பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்கள் சிலரை தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த விமர்சனங்கள் மற்றும் சட்டரீதியான புகார்களைத் தொடர்ந்து, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் பதின் வயதினருக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாட் ஜிபிடி-இன் புதிய பதிப்பை ஓபன் ஏஐ நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது.
சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
’ChatGPT for Teens’ (பதின் வயதினருக்கான சாட்ஜிபிடி) என்ற பெயரில் வெளியான இந்தப் பதிப்பில், 13 முதல் 17 வயதுக்குள்பட்டவர்கள் என பதிவு செய்யும் பயனர்களுக்கு ஏற்றவாறு விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு செயல்படும்.
Advertisement
Advertisement
சுய துன்புறுத்தல்கள், வன்முறை, உணவு உட்கொள்வதில் கோளாறுகள் மற்றும் வெளிப்படையான பாலியல் உள்ளடக்கங்கள் போன்ற விஷயங்களில் கட்டுப்பாடுகள் உள்பட, சிறார்களின் கணக்குகளுக்கு ஏற்கனவே இருந்த பாதுகாப்பு அம்சங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன.
மேலும், அடிக்கடி மொபைல் போனிலிருந்து இடைவேளை எடுப்பதற்கான நினைவூட்டல்கள், பயன்பாட்டை நிறுத்தி வைக்கும் நேரம் மற்றும் கற்றல் நேரம் போன்ற வசதிகளும் இதில் உள்ளன. இதில் கற்றல் நேர முறையில் நேரடியாகப் பதில்களை வழங்குவதற்குப் பதில், பாடப்பொருளைப் புரிந்துகொள்ள பதின்ம வயதினருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக என்று ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
தனக்கென தனிப்பட்ட உணர்வுகள் இருப்பதாகவோ அல்லது தனக்கென ஒரு சுய உணர்வு இருப்பதாகவோ சாட்ஜிபிடி கூறுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளும் இதில் உள்ளது. மேலும், குரல் வழி உரையாடல் போன்ற சில வசதிகள் இதில் முடக்கப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் தங்கள் சாட்ஜிபிடி கணக்குகளைத் தங்கள் பிள்ளைகளின் கணக்குகளுடன் இணைத்துக்கொள்ள முடியும். அதேபோல, பாதுகாப்பற்ற உரையாடல்கள் நிகழும்போது அதுதொடர்பான எச்சரிக்கை பெறும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சாட்ஜிபிடி - இல் வந்த தகவல்களைக் கொண்டு தாயையும் சகோதரரையும் கொன்றதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதின் வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதேபோன்று, சாட்ஜிபிடி பரிந்துரையின் செய்த வழிமுறைகளைப் பின்பற்றி தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுவன் ஆடம் ரெய்னின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு உள்பட இதேபோன்ற பல வழக்குகளை ஓபன் ஏஐ நிறுவனம் எதிர்கொண்டு வருகின்றது.
குழந்தைகள் மற்றும் பதின் வயதினருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பாக கவனம் செலுத்தி, டிஜிட்டல் நண்பர்களாக இருக்கும் ஏஐ தளங்கள் குறித்து அமெரிக்க அரசு நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சமூக ஊடகங்களைப் போன்றே ஏஐ தளங்களும் ஒழுங்குமுறை சார்ந்த அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் பல மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறார்கள் ஏஐ தளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக மற்ற ஏஐ நிறுவனங்களும் எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளன. அதன் விளைவாக, ஆந்த்ரோபிக் போன்ற சில ஏஐ நிறுவனங்கள், தங்கள் ஏஐ மாதிரியை வயது வந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளன.
OpenAI has launched a new version of ChatGPT for teenagers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.