ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஈரானில் நிலவும் பணமதிப்பிழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 2025 டிசம்பர் முதல் மாபெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தப் போராட்டங்களில், ஈரானின் புரட்சிகர காவல் படை மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்கு எதிரான அரசுப் படைகளின் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதனால், ஈரான் அரசுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் நிறைவு நாள் ஈரானில் இன்று (பிப். 11) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், நாடு தழுவிய போராட்டங்களாலும் அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து, பேசுகையில் ஈரான் அரசின் படைகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதை நேரடியாக ஒப்புக்கொள்ளாமல், போராட்டாத்தால் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை தாங்கள் அறிவோம் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது:
“மக்கள் முன் நாங்கள் வெட்கப்படுகிறோம். மேலும், இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் மக்களுடன் மோதலை கோரவில்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வலியுறுத்தும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.