அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் இறுதியானதை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி
அமெரிக்கா - ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதியான நிலையில், அதனை வரவேற்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தது பற்றி...
அமெரிக்கா - ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதியான நிலையில், அதனை வரவேற்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாமல் இருந்த காரணத்தால் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால், உலகின் பல நாடுகளில் அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டிய, இந்த 107 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் இன்று காலை அறிவித்தார்.
Advertisement
Advertisement
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மேற்கு ஆசிய போரானது, உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார சீர்குலைவையும் பல நாடுகளில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிறைவு செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நான் வரவேற்கிறேன்.
இந்த ஒப்பந்தமானது பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்கவும், சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்துக்கும் வழிவகை செய்யும் என்று இந்தியா நம்புகிறது.
எஞ்சிய பிரச்னைகள் குறித்த கலந்தாய்வுகள் ஒரு நீடித்த இறுதி உடன்பாட்டுடன் நிறைவடையும் என்று நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார் .