முகப்பு
உலகம்

தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?

துபையில் தங்கம் குறைந்த விலையில் விற்பனையாகி வருவது குறித்து...

Updated On : 6 மார்ச், 2026 at 2:22 PM
தங்கம்
பகிர்:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலில், துபையில் தேக்கமடைந்த தங்கம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆசிய நாடுகளுக்கு தங்கத்தைச் சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாகவும், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் தங்கத்தின் ஏற்றுமதிகளுக்கான போக்குவரத்து மையமாகவும் துபை செயல்பட்டு வருகின்றது.

மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்கள் மற்றும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தங்கத்தின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், போக்குவரத்து நெருக்கடிகள் மற்றும் விநியோகத்தில் குறைந்துள்ள நம்பகத்தன்மை ஆகியவற்றால் வாடிக்கையாளர்களும் வணிக நிறுவனங்களும் புதிய வர்த்தகங்களை மேற்கொள்ள தயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, மோதல்கள் எப்போது நிறைவடையும் என்பது தெரியாததாலும், காலவரையற்ற சேமிப்பு மற்றும் நிதி செலவுகளைக் குறைப்பதற்காகவும், துபை வர்த்தகர்கள் தங்கத்தின் விலையில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர்.

இதன்மூலம், துபை வர்த்தகர்கள் உலகளாவிய அளவுகோல் விலையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 30 அமெரிக்க டாலர்கள் வரை தள்ளுபடி வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் போர் காரணமாக குறைந்திருக்கும் தங்கத்தின் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் புதிய தள்ளுபடிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

summary

due to the tense situation in the Middle East, gold that has been stagnant in Dubai is being sold at low prices.

முழு கட்டுரையைப் படிக்க →