12 டன் கிட்கேட் சாக்லேட் திருட்டு!
நெஸ்ட்லே நிறுவனத்தின் 12 டன் எடை கொண்ட கிட்கேட் சாக்லேட் கண்டெயினர் திருடப்பட்டது பற்றி...
நெஸ்ட்லே நிறுவனத்தின் 12 டன் எடை கொண்ட கிட்கேட் சாக்லேட் கண்டெயினர் ஐரோப்பாவில் திருடப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல சாக்லேட் நிறுவனமான நெஸ்ட்லே 4,13,793 எண்ணிக்கை அளவிலான கிட்கேட் சாக்லேட் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி போக்குவரத்தின் போது ஐரோப்பாவில் திருடுபோனதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருடப்பட்ட கண்டெய்னர் லாரி மத்திய இத்தாலியில் இருந்து புறப்பட்டு போலந்துக்குச் செல்லும் வழியில் உள்ள நாடுகளில் சாக்லேட்டுகளை விநியோகிக்க திட்டமிட்டிருந்தது.
சாக்லேட்டுகள் குறிப்பாக எந்தப் பகுதியில் திருடப்பட்டன என்று அந்த நிறுவனம் கூறவில்லை. ஆனால், சாக்லேட் ஏற்றிச் சென்ற வாகனமும் அதிலுள்ள சாக்லேட்டுகளும் திருடப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
திருடுபோன சாக்லேட்டுகளின் மொத்த எடை 12 டன்கள் என்றும் தயாரிப்பு நிலையத்திலிருந்து விநியோகத்திற்குக் கொண்டு செல்லும் வழியில் திருடப்பட்டதாகத் நெஸ்ட்லே தெரிவித்துள்ளது.
இதுபற்றிப் பேசிய அந்நிறுவன செய்தித் தொடர்பாளர், “கிட்கேட் உடன் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் விளம்பரங்களில் மக்களை ஊக்குவிப்போம். ஆனால், அந்த வாசகத்தை உண்மையாக எடுத்துக்கொண்டு திருடர்கள் 12 டன் சாக்லேட்டுகளுடன் இடைவேளை எடுத்துள்ளனர்” என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
’இந்தத் திருட்டின் காரணமாக கடைகளில் கிட்கேட் சாக்லேட் தட்டுப்பாடு ஏற்படும். துரதிர்ஷ்டவசமாக வாடிக்கையாளர்களுக்கு ஈஸ்டர் தினம் வருவதையொட்டி தங்களுக்குப் பிடித்தமான கிட்கேட் சாக்லேட்டுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.
இதுதொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும், திருடப்பட்ட சாக்லேட்டுகள் ஐரோப்பியாவில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது’ என நெஸ்ட்லே தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு சாக்லேட் மீதும் காணப்படும் தனித்துவமான பார் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் திருடப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனைக்கு வந்தால் கண்டறிய முடியும் என்றும் அவ்வாறு கண்டறியப்பட்டால், நிறுவனத்திற்கு எச்சரிக்கை செய்வது பற்றிய வழிமுறைகள் கடைகளுக்கு வழங்கப்படும் என்றும் நெஸ்ட்லே அறிவித்துள்ளது.
Nestle says 12 tonnes of KitKat stolen