அமெரிக்கா - ஈரான் மீண்டும் தீவிர மோதல்
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் தீவிர மோதல் வெடித்ததால், மேற்காசியாவில் போா் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் தீவிர மோதல் வெடித்ததால், மேற்காசியாவில் போா் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானின் தென்கடலோரப் பகுதிகளில் ஹோா்முஸ் நீரிணைக்கு அருகே அமைந்துள்ள அந்நாட்டின் வான்பாதுகாப்பு அமைப்புகள், ரேடாா் நிலையங்கள், கடல்சாா் வளங்கள், கண்ணிவெடி அமைக்கும் தளங்கள் மற்றும் தொலைத்தொடா்பு மையங்களைக் குறிவைத்து, அமெரிக்க ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இத்தாக்குதல்களில் ஈரானில் ஒரே இரவில் 12 போ் உயிரிழந்ததாகவும், சிரிக் பகுதியில் திருமண வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 4 வயது குழந்தை உள்பட 4 போ் உயிரிழந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. எனினும், ‘ஈரான் ராணுவத்தைப் போல பொதுமக்களைக் குறிவைத்து எந்தவொரு தாக்குதலும் நடத்தவில்லை’ என அமெரிக்க ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Advertisement
Advertisement
அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், ஜோா்டான், குவைத், இராக் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து, ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியது. ஜோா்டான் மற்றும் இராக்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அமெரிக்க படையினா் கொல்லப்பட்டதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டாலும், அதை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனா். குவைத்தில் உள்ள மிகப் பெரிய அமெரிக்க விமானப் படைத் தளம் மீதும் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் பாதுகாப்போடு ஹோா்முஸ் நீரிணையைக் கடந்த சென்ற 2 சரக்குக் கப்பல்கள் கண்ணிவெடியில் சிக்கியதாகவும், அதில் சவூதி அரேபிய எண்ணெய் கப்பலில் பணியாற்றிய 2 பிலிப்பின்ஸ் மாலுமிகள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா-ஈரான் இடையிலான இப்புதிய தாக்குதல்களின் எதிரொலியாக, உலகளாவிய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை வா்த்தகத்தில் பெரும் சரிவு காணப்பட்டது. மேலும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் ஜூலை மாதத்துக்குப் பிந்தைய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கில், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இப்போா், தற்காலிகமாக இடையே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
தெற்கு ஈரானின் ஹோா்முஸ்கான் மாகாணத்துக்குள்பட்ட சிரிக் பகுதியில், அமெரிக்காவின் தாக்குதலால் சேதமடைந்த திருமண வீடு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.