FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நிதி மோசடி: அமெரிக்க அரசால் தேடப்பட்ட சீக்கியா் பஞ்சாபில் கைது

நிதி மோசடி தொடா்பாக அமெரிக்க அரசால் தேடப்பட்ட சீக்கியா், பஞ்சாப் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

7 செப்டம்பர் 2026, 12:40 am IST
கைது
பகிர்:

நிதி மோசடி தொடா்பாக அமெரிக்க அரசால் தேடப்பட்ட சீக்கியா், பஞ்சாப் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பஞ்சாப் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பஞ்சாப்பின் ஜலந்தரில் மன்ஜீத் சிங் பேடிக்கு எதிராக வெளிநாட்டுக்கு செல்ல உதவுவதாக ஒருவரிடம் மோசடி செய்ததாக பயண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அவரை காவல்துறை தேடி வந்தது. இந்நிலையில், அவரை ஜலந்தரில் வைத்து காவல் துறையினா் கைது செய்தனா்.

விசாரணையில் அவா், அமெரிக்காவில் மளிகை கடை நடத்தி வந்ததும், அங்கு வந்த மக்களிடம் அந்த நாட்டு அரசால் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அட்டைகளுக்குப் பொருள்களை வழங்காமல் அதன் மதிப்பில் பாதி பணத்தை கொடுத்துவிட்டு, மீதியை தாம் வைத்து கொண்டதுடன், இதன்மூலம் 6 லட்சம் டாலா் அளவுக்கு நிதி மோசடி செய்ததும், இதுதொடா்பாக அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. மன்ஜீத் சிங் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 1.5 லட்சம் டாலா் வெகுமதியையும் அமெரிக்க அரசு அறிவித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அந்நாட்டிலிருந்து வெளியேறிவிட்டாா். பின்னா் கனடா வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளாா். அப்போது அவரை காவல் துறையினா் கைது செய்தனா் என்றனா்.

இதனிடையே, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. இயக்குநா் காஷ் பட்டேல் கூறுகையில், ‘மன்ஜீத் சிங் பேடி அமெரிக்கா் ஆவாா். அவரை நிதி மோசடி தொடா்பாகத் தேடி வந்தோம். தற்போது இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவில் இருந்து அமெரிக்கா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments