பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: பிரதமர் மோடியின் கருத்து தவறானது
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்து தவறானது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்து தவறானது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிங்கப்பூரில் உள்ள குமாரசாமி, பெங்களூரில் உள்ள முதல்வர் அலுவலகம் வாயிலாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது கருத்து தவறானது., இது நாட்டுக்கு துரதிருஷ்டவசமானதாகும்.
விவசாயிகளின் நலனை பாதுகாக்க, அவர்களுக்கு அளித்திருந்த வாக்குறுதிதான் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம். இந்தத் திட்டத்தை அரசு நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடிக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்குக் குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையிலும், இது விவசாயிகளுக்கான மிக கொடூரமான நகைச்சுவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது வருந்தக் கூடியதாகும். இந்தத் திட்டம் தொடர்பான தரவுகளை பெற்றுக் கொள்ளாமலேயே நாட்டு மக்களைத் திசைதிருப்பும் வேலையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தவறான கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முன்பாக, இந்தத் திட்டத்தின் உண்மைகளை பிரதமர் மோடி அறிந்துகொள்வது அவசியமாகும்.
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான தகவல்கள் பிற மாநிலங்களைப் போல அல்லாமல், முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேர்மையான முறையில் வரிசெலுத்தியவர்களின் பணத்தை உண்மையான விவசாயிகளிடம் சேர்ப்பதற்காக எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறோம். உண்மையான விவசாயிகள் பலன்பெறுவதை உறுதிசெய்துள்ளோம்.
கூட்டுறவு வங்கிகளில் உள்ள இடைத்தரகர்களை முழுமையாக அகற்றியுள்ளோம். இந்தமுறையில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தைச் செயல்படுத்த பிற மாநிலங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் பயன் சென்றடைய ஆதார், மின்னணு நில ஆவணங்கள் உறுதி, குடும்ப அட்டை வாயிலாக உறுதிப்படுத்துகிறோம்.
விவசாயிகளின் தனிப்பட்ட வங்கிக்கணக்குகளில் மின்னணு பணபரிமாற்றத்தின் வழியாக இதுவரை ரூ.350கோடியை 60 ஆயிரம் விவசாயிகளுக்கு அளித்திருக்கிறோம். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பணபரிமாற்றம் வழியாக வாரம்தோறும் கடன் தொகையை செலுத்தி வருகிறோம்.
அடுத்தவாரம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ரூ.400 கோடி வழங்கப்படவிருக்கிறது. தேசியவங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 21 லட்சம் விவசாயிகளில், கடந்த 10 நாள்களில் மட்டும் 8.5 லட்சம் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டையின் நகலை அளித்திருக்கிறார்கள். 2019-ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள உண்மையான விவசாயிகளைக் கண்டறிந்துவிடுவோம். இந்ததிட்டத்தை பழுதில்லாமல் செயல்படுத்த அதிகாரிகள் அல்லும் பகலும் கடுமையாக உழைத்துவருகிறார்கள். மேலும், விவசாயிகளுக்கு விரைந்து கடன் உதவித்தொகையை சேர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.
இந்த விவரங்களை அறிந்துகொண்டபிறகும், அதேகருத்தை பிரதமர் மோடியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உதவிக்கு வருமாறு கர்நாடக அரசு பலமுறை விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசு இணங்கவில்லை. ஆனால், அரசியல் லாபங்களுக்காக பிரதமர் மோடி, தவறான கருத்துகளின் அடிப்படையில் கர்நாடக அரசை சிறுமைப்படுத்தும் கருத்துகளை கூறியிருக்கிறார்.
புதுதில்லியில் அண்மையில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களுக்கு மத்திய அரசு சாதகமாக பதிலளிக்கவில்லை. ஆனால், இன்னலில் தனிக்கும் விவசாயிகளை அதில் இருந்து கர்நாடக அரசு முயற்சி எடுத்தால், அதை கிண்டல் செய்வது விரும்பத்தகுந்தது அல்ல என்று குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.