"கோலார் தங்கவயலில் ஆசிரியர் மாளிகை கட்டப்படும்'
கோலார் தங்கவயலில் ஆசிரியர் மாளிகை கட்டப்படும் என்று தொகுதி எம்.எல்.ஏ. ரூபகலா தெரிவித்தார்.
கோலார் தங்கவயலில் ஆசிரியர் மாளிகை கட்டப்படும் என்று தொகுதி எம்.எல்.ஏ. ரூபகலா தெரிவித்தார்.
கோலார் தங்கவயலில் ராபர்ட்சன்பேட்டையில் புதன்கிழமை ஆசிரியர் தின விழா தொகுதி எம்எல்ஏ ரூபகலா தலைமையில் நடந்தது. இந்த விழாவில் இந்நாள், முன்னாள் ஆசிரியர்களைப் பாராட்டி கெளரவித்தப் பிறகு, அவர் பேசியது: இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக விளங்கிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ராதாகிருஷ்ணன், ஆசிரியர் சமுதாயத்தின் முன்னுதாரணமாக விளங்கியவர். அவரது அடியொற்றி நல்லாசிரியர்களை நாம் ஆண்டுதோறும் பாராட்டி மகிழ்கிறோம். ஆசிரியர்கள் தான் நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்கும் வல்லமை படைத்தவர்கள். அறிவு சமூகத்தின் முகவரியாக திகழும் ஆசிரியர்களின் வாழ்க்கை தியாகம் நிரம்பியது. மாணவர்களை தம் சொந்தப் பிள்ளைகளைப் போல் பாவித்து, அவர்களை கல்வியாளர்களாக உருவாக்கும் உயர்ந்தவர்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்பெருமக்களுக்கு பயன்படும் வகையில் திட்டமிடப்பட்ட ஆசிரியர் மாளிகை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கட்டி முடிக்கப்படாமல் உள்ளதாகத் தெரிவித்தார்கள். அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு, ஆசிரியர் மாளிகையைக் கட்டி முடிப்பேன். மேலும், ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பேன் என்றார்.
நிகழ்ச்சியில், தங்கவயல் காவல் கண்காணிப்பாளர் லோகேஷ் குமார், நகரசபை ஆணையர் ஸ்ரீகாந்த், நகரசபை துணைத்தலைவர் ஜெயந்தி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.