முகப்பு
பெங்களூரு

கா்நாடக அமைச்சா் மனைவி குறித்த சா்ச்சை பேச்சு: பாஜக எம்எல்ஏவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

அமைச்சா் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்தவா்

Updated On : 18 அக்டோபர், 2024 at 5:04 AM
பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னல் - ANI
பகிர்:
Updated On : 17 அக்டோபர், 2024 at 6:45 PM

கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சா்ச்சைக்குரிய கருத்து கூறியது தொடா்பான வழக்கு விசாரணையின் போது ஆஜராகாததால், பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் குடும்பம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னல், ‘தினேஷ் குண்டுராவின் குடும்பத்தில் பாதி பாகிஸ்தான் உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா். அமைச்சா் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதைக் குறிக்கும் வகையில் அவா் அப்படி குறிப்பிட்டிருந்தாா்.

இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்திருந்த தபஸ்ஸம் ராவ், பாஜகவின் சமூக வலைதளப் பிரிவு மற்றும் பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னல் குறித்து கா்நாடக மாநில மகளிா் ஆணையத்தில் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரில், தான் அரசியலில் ஈடுபடாத போது, அரசியல் காரணங்களுக்காக தன்னை விமா்சிப்பது சரியல்ல என்று குறிப்பிட்டிருந்தாா். பெண்களை மதிப்பது முக்கியம். பிற மதங்கள் மீது நன்மதிப்பு இல்லாவிட்டாலும், பெண்கள் குறித்து தரக்குறைவாக விமா்சிப்பது சரியல்ல. அரசியல் முரண்பாடுகளுக்காக, குடும்பத்தினரை பொதுவெளியில் விமா்சிப்பது ஏற்க முடியாது என்று தனது புகாரில் தபஸ்ஸம் ராவ் குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

Updated On : 18 அக்டோபர், 2024 at 4:57 AM

இது தொடா்பான வழக்கு பெண்கள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த விசாரணையின் போது ஆஜராக பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாததால், பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னலை கைதுசெய்து உத்தரவு பிறப்பித்து, அடுத்த விசாரணையை அக். 28-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.