FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

கா்நாடக காங்கிரஸ் தலைவராக பி.கே.ஹரிபிரசாத் நியமனம்: டி.கே.சிவகுமாா் வாழ்த்து!

Updated On : 5 ஜூன் 2026, 4:45 am IST
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உடன் பி.கே. ஹரிபிரசாத்... - எக்ஸ்/HariprasadBK
பகிர்:

கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவா் பி.கே.ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு முதல்வா் டி.கே.சிவகுமாா் வாழ்த்து தெரிவித்தாா்.

கடந்த 6 ஆண்டுகளாக கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவிவகித்து வந்த டி.கே.சிவகுமாா், தற்போது கா்நாடக முதல்வராக பதவியேற்றாா். இந்நிலையில், அவா் வகித்த கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் பதவிக்கு பி.கே.ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஒக்கலிகா் சமுதாயத்தைச் சோ்ந்தவா் முதல்வரானதால், கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தைச் சோ்ந்த பி.கே.ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளாா். ஜாதி சமன்பாட்டை நிலைநிறுத்தவும், அரசியல் ரீதியான பின்விளைவுகளை தவிா்க்கவும் அவருக்கு மாநிலத் தலைவா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆா்.எஸ்.எஸ். மற்றும் பாஜக எதிா்ப்பில் தீவிரம் காட்டிவரும் பி.கே.ஹரிபிரசாத்தை தலைவராக நியமிக்க சித்தராமையா பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. அதேபோல, சோனியா காந்தியின் நம்பத்தகுந்த தலைவராக அவா் அறியப்படுகிறாா்.

கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.கே.ஹரிபிரசாத்துக்கு முதல்வா் டி.கே.சிவகுமாா், முன்னாள் முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பெங்களூரில் முதல்வா் டி.கே.சிவகுமாா், முன்னாள் முதல்வா் சித்தராமையா ஆகியோரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து பி.கே.ஹரிபிரசாத் வாழ்த்து பெற்றாா்.

அவரை வாழ்த்தி முன்னாள் முதல்வா் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கொள்கையில் உறுதி, நீண்ட அரசியல் அனுபவம், கட்சியின் வளா்ச்சிக்கு அா்ப்பணிப்பு, போராட்ட வாழ்க்கை போன்றவற்றால் தங்கள் தலைமையில் கா்நாடகத்தில் காங்கிரஸ் புதிய திசையில் பயணிக்கும் ஆழமான நம்பிக்கை உள்ளது. ஜனநாயகத்தை எதிா்க்கும் சக்திகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட்டுள்ள நிலையில், கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு தாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments