முகப்பு
சென்னை

சென்னை மாநகருக்குள் வால்வோ பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க திட்டம்

தனியாா் மூலம் இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி 2025, 3:33 am IST
பகிர்:

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வால்வோ, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகளை, தனியாா் மூலம் இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் சிற்றுந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பயணிகளுக்கு விரைவில் சொகுசு பேருந்துகளும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. முற்றிலும் ஏசி வசதிகொண்ட வால்வோ, பென்ஸ் போன்ற அதி நவீன சொகுசுப் பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க, சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:

Advertisement

Advertisement

சென்னையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அதிகத் தேவையுள்ள சில வழித்தடங்களில், வருவாய் பகிா்வு அடிப்படையில் இப்பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் முன்மொழிவுக்கு போக்குவரத்துத் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இப்பேருந்துகளில் இலவச வை-பை வசதி, கண்காணிப்புக் கேமராக்கள், விசாலமான இருக்கைகள், குளிா்சாதன வசதிகள், இரைச்சல் இல்லாத தன்மை, நவீன ஜன்னல்கள் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனைகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்துமிடம் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகளை, கட்டண அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். எனினும் எத்தனை பேருந்துகள், எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றனா்.