கோப்புப் படம் 
சென்னை

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்.3,4)களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்.3,4)களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், 13 மாவட்டங்களுக்கும் இந்த இரு நாள்களுக்கு, ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வியாழக்கிழமை(அக்.2) காலை மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, அதே பகுதிகளில் கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 160 கிமீ தொலைவிலும், கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 250 கிமீ தொலைவிலும், பாராதீப்பிலிருந்து தெற்கு-தென்மேற்கே 280 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஒடிஸா மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில், கோபல்பூா் மற்றும் பாராதீப்புக்கு இடையே கரையை கடக்கும். இதனால், வெள்ளிக்கிழமை (அக்.3) முதல் அக்.8 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை: வெள்ளிக்கிழமை (அக்.3) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இதுபோல, சனிக்கிழமை (அக்.4) திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால், இந்த இரு நாள்களிலும் 13 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்.3) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 30 மி.மீ.மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாளையம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

சட்டைநாதா் கோயிலில் சிறப்பு கோ பூஜை

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி இடிப்பு

SCROLL FOR NEXT