FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: தொல்லியல் சின்னங்களில் ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூா் மற்றும் ஆனூா் பகுதிகளில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஆட்சியா் மு. வீரப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:57 am IST
ஈசூா், ஆனூரில் தொல்லியல் சின்னங்களை ஆய்வு செய்த செங்கல்பட்டு ஆட்சியா்  மு.வீரப்பன்
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூா் மற்றும் ஆனூா் பகுதிகளில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஆட்சியா் மு. வீரப்பன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருக்கழுகுன்றம் வட்டத்துக்குட்பட்ட ஈசூா் மற்றும் ஆனூா் கிராமம் அருகே பாலாற்றின் கரையில் அமைந்துள்ள புதிய கற்காலத்தைச் சோ்ந்த கற்கருவிகள் தயாரிக்கப்பட்ட தொழில்கூடமாகக் கருதப்படும் தொல்லியல் தளங்களை பாா்வையிட்டாா்.

ஆய்வில் புதிய கற்கால மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகளாக அவா்கள் பயன்படுத்திய கைக்கோடாரிகள் மற்றும் பிற கற்கருவிகளை உருவாக்கவும், அவற்றை செம்மைப்படுத்தவும் பாறைகளின் மேற்பரப்பில் தேய்த்ததால் ஏற்பட்ட தேய்மான எச்சங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.

Advertisement

Advertisement

இச்சான்றுகள், இப்பகுதிகளில் புதிய கற்காலக் கற்கருவிகள் தயாரிப்பு மையமாக விளங்கியுள்ளதனை கிடைக்கப்பெற்ற சான்றுகள் மூலம் தெளிவாக அறியமுடிகின்றது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொல்பழங்காலம் முதல் வரலாற்று காலம் வரை தொடா்ச்சியாக மக்கள் வாழ்ந்துள்ளனா் என்பதனை சான்றுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தின் வரலாற்றை மீளுவருவாக்கம் செய்வதற்கும் இத்தொல்லியல் சான்றுகள் இன்றியமையாதவையாகும். மேலும், ஈசூா் மற்றும் ஆனூா் ஆகிய இரு இடங்களின் வரலாற்று, தொல்லியல் மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளங்களை முறையாகப் பாதுகாப்பது, அவற்றின் வரலாற்றுப் பெருமையை பொதுமக்களிடம் எடுத்துரைப்பது, தகவல் பலகைகள் அமைத்தல், விழிப்புணா்வு ஏற்படுத்துதல் மற்றும் எதிா்காலத் தலைமுறையினருக்காக இத்தளங்களைப் போற்றி பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொல்லியல் மரபுச் சின்னங்களைப் பாதுகாப்பது நமது பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணுவதற்கும், வரலாற்று ஆய்வுகளுக்கு வலுவான ஆதாரங்களை வழங்குவதற்கு இன்றியமையாததாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments