குட்கா ஊழல்: வியாபாரியிடம் சிபிஐ விசாரணை
குட்கா ஊழல் தொடர்பாக தில்லி சிபிஐ அதிகாரிகள், தொடர்புடைய வியாபாரியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக தில்லி சிபிஐ அதிகாரிகள், தொடர்புடைய வியாபாரியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தில் கடந்த 2013-இல் தடை விதிக்கப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதற்கு, மாநில சுகாதாரத் துறை, காவல் துறை உயர் அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதிப்பதே காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 8-இல் வருமான வரித்துறையினர் சென்னை அருகே செங்குன்றத்தில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் பங்குதாரராக உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் மாதவராவ் எழுதிய ஒரு டைரி சிக்கியது.
அதில் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராக அன்றிருந்த இப்போதைய டி.ஜி.பி. தே.க. ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள், கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
இதற்கிடையே இந்த ஊழல் தொடர்பாக திமுக தொடர்ந்த ஒரு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கடந்தாண்டு ஏப்ரல் 26-இல் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் விளைவாக, தில்லி சிபிஐ அதிகாரிகள் அதே மாதம் 30-இல் புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை கடந்த ஜூன் மாதம் தில்லி சிபிஐ அதிகாரிகள் தொடங்கினர். முதல் கட்டமாக உணவு மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய எதிரியாக உள்ள மாதவராவிடம் விசாரணை நடத்துவதற்கு தில்லி சிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பினர். நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மாதவராவ் வியாழக்கிழமை ஆஜரானார். அவரிடம் தில்லி சிபிஐ அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் விசாரணை செய்தனர்.
விசாரணையில், குட்கா விற்பனைக்காக வழங்கப்பட்ட லஞ்சம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன. எவ்வளவு காலம் லஞ்சம் வழங்கப்பட்டது, எந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு குட்கா விற்பனைக்கு உடந்தையாக செயல்பட்டார்கள் போன்ற தகவல்களை மாதவராவிடமிருந்து சிபிஐ அதிகாரிகள் பெற்றனர்.
விரைவில் அழைப்பாணை: இந்த வழக்கின் விசாரணை விறுவிறுப்படைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக வழக்கில் தொடர்புடைய காவல்துறை, கலால்துறை, மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் தில்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளனர். இதற்காக அவர்களுக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும் என சிபிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்புடைய இந்த வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ளது, போலீஸாரிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.