மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக கடன்: வங்கிகளுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகக் கடன் வழங்கிய வங்கிகளைப் பாராட்டி விருது, சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையர்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகக் கடன் வழங்கிய வங்கிகளைப் பாராட்டி விருது, சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் புதன்கிழமை வழங்கினார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சென்னை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தனி நபர்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகக் கடன் வழங்கிய வங்கிகளைப் பாராட்டி சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், 2016-17-ஆம் நிதி ஆண்டில் 2,314 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80.73 கோடி கடனுதவி வழங்கிய ரெப்கோ வங்கிக்கும், 1,541 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.67.90 கோடி கடனுதவி வழங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கும், சென்னை மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்பட்டு 770 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30.67 கோடி கடனுதவி வழங்கிய தண்டையார்பேட்டை ரெப்கோ வங்கிக் கிளைக்கும், 601 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20.01கோடி கடனுதவி வழங்கிய அம்பத்தூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளைக்கும், 314 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.19.91 கோடி கடனுதவி வழங்கிய கே.கே.நகர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளைக்கும் விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்களை ரிப்பன் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையர் தா.கார்த்திகேயன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் (கல்வி) பி.குமாரவேல்பாண்டியன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ரெப்கோ வங்கி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.