மெட்ரோ ரயில் கட்டணங்களை குறைக்கக் கோரிய மனு தள்ளுபடி
மெட்ரோ ரயில் கட்டணங்களை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மெட்ரோ ரயில் கட்டணங்களை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவில், முதல் கட்டமாக 2015 ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை10 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலும், டி.எம்.எஸ். முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும் என 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
புறநகர் மின்சார ரயில்களைப் போல மெட்ரோ ரயில்களுக்கும் குறைந்தது 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். மெட்ரோ ரயில்களில் புறநகர் ரயில்களைவிட 12 மடங்கு அதிகமாக 60 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், மெட்ரோ ரயில் சேவையில் தனியார் சேவையைத் தவிர்த்து , இந்திய ரயில்வே துறையே ஏற்று நடத்தவும் கட்டணங்களைக் குறைக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மெட்ரோ ரயில்களை வாங்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்பது உள்ளிட்ட எந்த புள்ளிவிவரங்களும் மனுதாரரிடம் இல்லை. மேலும், கட்டணம் நிர்ணயிப்பது, மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரத்துக்குட்பட்டது. மெட்ரோ ரயில் கட்டணத்தை நிர்ணயிப்பது உயர் நீதிமன்றத்தின் பணி இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.