36 நாள்களுக்குப் பிறகு... அமைதி திரும்பிய ஜந்தர் மந்தர்!
தில்லியின் ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது குறித்து...
தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் 36 நாள்களுக்குப் பிறகு அமைதி திரும்பியது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தலைமையில் தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ஜூன் 20 ஆம் தேதியில் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும், இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
அதுமட்டுமின்றி, போராட்டத்தில் கலந்துகொள்ள இயலாத சிலர், போராட்டக் களத்தில் இருந்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாக உணவு ஆர்டர் செய்து உதவினர்.
இதனிடையே, ஜூன் 28 ஆம் தேதியில் சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக்கும், இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.
தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த இந்தப் போராட்டம், ஒரு மாதத்துக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உண்ணாவிரதத்தில் இருந்த சோனம் வாங்சுக்கின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு, அவரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே, அபிஜித்துக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போராட்டம் தொடங்கிய 36 நாள்களுக்குப் பிறகு, தர்மேந்திர பிரதான் பதவியை ராஜிநாமா செய்ததால், போராட்டம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.
36 நாள்களாக போராட்டமும் முழக்கமும் என்றிருந்த ஜந்தர் மந்தரில், போராட்டம் முடிவுற்றதால் இன்று அப்பகுதி மீண்டும் அமைதி நிலைமைக்குத் திரும்பியது. மேலும், உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோனம் வாங்சுக் குணமடைந்ததாகவும், டைபாய்டு தொற்று ஏற்பட்டிருந்த அபிஜித்தும் வீட்டில் குணமடைந்தததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Delhi: Calm returns to Jantar Mantar after 36-day NEET protest ends
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.