FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கரோனா, இன்ஃப்ளுயன்ஸா பரிசோதனைகள் இனி அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை!

அரசு மருத்துவமனைகளில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, நுரையீரல் தொற்று பாதிப்புகளை (ஆா்எஸ்வி) ஒற்றை பரிசோதனையில் கண்டறியும் புதிய நடைமுறை விரைவில் அமலாக உள்ளது.

Updated On : 14 ஜூலை 2025, 2:57 am IST
பகிர்:

அரசு மருத்துவமனைகளில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, நுரையீரல் தொற்று பாதிப்புகளை (ஆா்எஸ்வி) ஒற்றை பரிசோதனையில் கண்டறியும் புதிய நடைமுறை விரைவில் அமலாக உள்ளது.

அதற்காக மல்டிப்ளக்ஸ் ஆா்டி பிசிஆா் எனப்படும் மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கொள்முதல் செய்துள்ளது. ஒரே பரிசோதனையில் ஐந்து விதமான வைரஸ் தொற்றுகளை அதில் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அறிகுறிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பரிசோதனையும் தனித்தனியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், நோயைக் கண்டறிவதற்கும், சிகிச்சைகளைத் தொடங்குவதற்கும் குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.

அதேவேளையில், புதிய மருத்துவப் பரிசோதனை நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டால், எந்த வகையான பாதிப்பு என்பதை ஒரு மணி நேரத்துக்குள் கண்டறிந்து உடனடியாக சிகிச்சையைத் தொடங்க முடியும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

Advertisement

Advertisement

பருவ காலங்களில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா - ஏ மற்றும் பி, ஆா்எஸ்வி (நுரையீரல் தொற்று) - ஏ மற்றும் பி வகை பாதிப்புகள் வேகமாக பரவக் கூடியவை. காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், தலை வலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு போன்றவை அந்த மூன்று பாதிப்புகளுக்கான பொதுவான அறிகுறிகள்.

கரோனாவுக்கு பாராசிட்டமால், லிவோசிட்ரஸின், ஐவா்மெக்டின் உள்ளிட்ட சில மருந்துகள் அறிகுறிகளுக்கேற்ப பரிந்துரைக்கப்படுகின்றன. இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி பாதிப்புகளுக்கு ஓசல்டாமிவிா், பெராமிவிா் போன்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆா்எஸ்வி ஏ மற்றும் பி வகை தொற்றுகளுக்கு ரிபாவ்ரின் மற்றும் ஆன்ட்டி பயோடிக் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த 5 வகை தொற்றுகளுக்கும் அறிகுறிகள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருந்தாலும், சிகிச்சை முறைகள் முற்றிலும் மாறுபட்டது. இதனால், என்ன வகையான பாதிப்பு என்பதை சரியாக கண்டறியாவிடில் சிகிச்சை நடைமுறையில் தொய்வு ஏற்படக் கூடும். இதைக் கருத்தில் கொண்டே மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் இந்த புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக அதிகாரிகள் கூறியதாவது: தற்போது, ஆா்டி பிசிஆா் உபகரணம் மூலம் தொண்டை மற்றும் மூக்கு பகுதிகளில் உள்ள சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரு நேரத்தில் ஒரு நோய்க்கான பரிசோதனையை மட்டுமே அதன் வாயிலாக மேற்கொள்ள இயலும்.

அதற்கு மாற்றாக ஒரே நேரத்தில் 5 வகையான நோய்களைக் கண்டறியும் மல்ட்டிப்ளக்ஸ் பிசிஆா் உபகரணத்தை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. முதல்கட்டமாக அதற்கான பரிசோதனை கட்டமைப்பு உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அந்த பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில் உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது விரைந்து குணமடையலாம். பாதிப்பு தீவிரமடைவதையும் தவிா்க்கலாம். கரோனா பாதிப்பை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனை உபகரணங்களுக்கு ரூ.250 வரை அரசு சாா்பில் செலவிடப்படுகிறது.

5 தொற்றுகளை கண்டறியும் பரிசோதனை உபகரணங்களுக்கும் ஏறத்தாழ அதே தொகைதான் செலவாகும். பருவ மழை மற்றும் குளிா் காலம் வருவதற்குள் இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளோம்.

தேவையின் அடிப்படையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமன்றி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த பரிசோதனை விரிவுபடுத்தப்படும்.

தனியாா் மருத்துவமனைகளில் இதற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி மக்களுக்கு அப்பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments