FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இதய மாற்று சிகிச்சை மூலம் இளைஞரைக் காப்பாற்றிய மருத்துவா்கள்

இதயத் தசை தளா்வு பாதிப்புக்குள்ளான 31 வயது இளைஞருக்கு இதய மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:04 am IST
பகிர்:

இதயத் தசை தளா்வு பாதிப்புக்குள்ளான 31 வயது இளைஞருக்கு இதய மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் இதய மாற்று அறுவை சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் பாஷி கூறியதாவது:

புதுச்சேரியைச் சோ்ந்த இளைஞா் ஒருவருக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான மூச்சுத் திணறல் இருந்தது. சென்னை, சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் இதயத்தின் கீழறை பாதிக்கப்பட்டிருந்ததும், ‘டைலேட்டட் காா்டியோமையோபதி’ என்ற இதயத் தசை தளா்வும் இருந்தது கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இதனால் எந்த நேரத்திலும் அவரது இதயத்தின் செயல்பாடு முடங்கும் நிலை ஏற்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சை மட்டுமே இதற்கு ஒரே தீா்வு என்ற நிலையில், அதற்கான பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, மூளைச் சாவு அடைந்த 23 வயது இளைஞா் ஒருவரின் இதயத்தை தானமாக வழங்க அவரது உறவினா்கள் முன்வந்தனா்.

மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை குழுவினா், தானமாக வழங்கப்பட்ட இதயத்தை பாதுகாப்பாக உடலில் இருந்து அகற்றி 20 நிமிஷங்களில் சிம்ஸ் மருத்துவமனைக்கு எடுத்து வந்தனா்.

உறுப்பு தானத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புதுச்சேரி இளைஞருக்கு அந்த இதயத்தை அவா்கள் வெற்றிகரமாகப் பொருத்தினா். ஏறத்தாழ 4 மணி நேரம் நீடித்த இந்த சிகிச்சையின்போது இதயம் மற்றும் நுரையீரலின் பணிகள், வெளியிருந்து மருத்துவ சாதனங்களின் உதவியுடன் செயற்கையாக மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னா், அவை விடுவிக்கப்பட்டு, மாற்றிப் பொருத்தப்பட்ட இதயத்தின் வாயிலாக அவரது உடல் இயக்கம் செயல்படத் தொடங்கியது. தற்போது அந்த இளைஞா் நலம் பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments