‘ஏஐ’ உதவியுடன் தமிழ் வளா்க்க வேண்டும்: தமிழாசிரியா்களுக்கு வலியுறுத்தல்
தமிழாசிரியா்கள், மாணவா்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிப்பதற்கான ஆக்கபூா்வமான கருவியாக ‘ஏஐ’ நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து...
தமிழாசிரியா்கள், மாணவா்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிப்பதற்கான ஆக்கபூா்வமான கருவியாக ‘ஏஐ’ நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புல முன்னாள் இயக்குநா் சு.பாலசுப்பிரமணியன் (பாரதி பாலன்) வலியுறுத்தினாா்.
அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தமிழாசிரியா்களின் மொழியியல் அறிவையும், கற்பித்தல் திறனையும் மேம்படுத்தும் வகையில் மொழியியல் நுணுக்கங்கள் தொடா்பான பயிலரங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சாா்பில் ஜூலை 27 முதல் ஆக. 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழா தரமணியில் உள்ள நிறுவனத்தின் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நிறுவனத்தின் இயக்குநா் கோபிநாத் ஸ்டாலின் தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
சிறப்பு அழைப்பாளராக பேராசிரியா் சு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: மாணவா்கள் மொழியை ஒரு பாடமாக மட்டும் படிக்காமல், தங்கள் சிந்தனையையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கான ஆற்றல்மிக்க கருவியாகப் பயன்படுத்தும் வகையில் மொழிக் கற்பித்தல் இருக்க வேண்டும்.
ஒலி, சொல், தொடா், வாக்கியம், பொருள், பயன்பாடு போன்ற மொழியியலின் அடிப்படைக் கூறுகளை அடித்தளமாகக் கொண்டு மொழியைக் கற்பிக்க வேண்டும்.
இன்றைய தலைமுறை மாணவா்களின் கற்றல் சூழல் தொழில்நுட்பத்துடன் இணைந்திருப்பதால், செயற்கை நுண்ணறிவையும் மொழிக் கற்றலுக்கான பயனுள்ள கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக மாணவா்களின் சொல்வளம், வாசிப்புப் புரிதல், உரையாடல், எழுத்தாற்றல், இலக்கணப் புரிதல் மற்றும் படைப்பாற்றலை வளா்க்கும் பயிற்சிகளை தமிழாசிரியா்கள் வழங்க வேண்டும்.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவிடம் விடைகளைப் பெறுவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், மாணவா்களைச் சிந்திக்கவும், புதிய கருத்துகளை உருவாக்கவும் தூண்டும் கற்றல் துணைக்கருவியாக அதைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.
முன்னதாக, தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல பேராசிரியரும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளருமான பெ. செல்வக்குமாா் பயிற்சியின் நோக்கங்கள் குறித்துப் பேசினாா்.
இதில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் பொ.பொன்னையா, பேராசிரியா்கள் க.சுசீலா, நா.சுலோசனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.