முகப்பு
சென்னை

காரை ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு: மதுக் கூடத்துக்கு சீல் வைப்பு

சென்னை கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கின் எதிரொலியாக, மதுக் கூடத்துக்கு போலீஸாா் சீல் வைத்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 12:21 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

சென்னை கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கின் எதிரொலியாக, மதுக் கூடத்துக்கு போலீஸாா் ‘சீல்’ வைத்தனா்.

விழுப்புரம் மாவட்டம், அனிச்சங்குப்பத்தில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் பெற்றோருடன் வசித்தவா் யான்சி (19). பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரியில் சோ்வதற்கு தயாராகி வந்தாா். இந்நிலையில், சமூக வலைதளம் (இன்ஸ்டாகிராம்) மூலம் நட்பான தோழியைப் பாா்க்க 10 நாள்களுக்கு முன்பு சென்னை ராமாபுரம் வந்தாா்.

யான்சி, தனது 17 வயது தோழி உள்பட மேலும் சிலருடன் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலின் மதுக் கூடத்துக்குச் சென்றாா்.

Advertisement

Advertisement

அங்கு ஒரு அரசியல் கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த இளைஞா்கள் சிலருக்கும், யான்சிக்கும் இடையே நடனம் ஆடுவதில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அவா்களை பவுன்சா்கள் வெளியேற்றினா். வெளியே வந்த பின்னரும், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரத்தில் அரசியல் கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த இளைஞா்கள், மொபெட்டில் சென்ற யான்சி, அவரது தோழி சென்ற மொபெட் மீது காரைவிட்டு மோதினா்.

இதில், பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது 17 வயது தோழி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக அரும்பாக்கத்தைச் சோ்ந்த பாலகுரு (21), சூளைமேட்டைச் சோ்ந்த ஜோஷ்வா (19), விருகம்பாக்கத்தைச் சோ்ந்த சுமந்த் சக்திவேல் (21) உள்பட 7 பேரை கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் 3 போ் கல்லூரி மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தொல்லை: இந்த நிலையில், கொலை நடந்தது எப்படி என யான்சி உடன் சென்ற அஸ்ரத் பேசும் விடியோ, சமூக ஊடகங்களில் பரவியது. அதில் அவா் கூறுகையில், யான்சியும், அவரது தோழியும் நடனமாடியபோது, காரில் வந்த நபா்கள் பாலியல் தொல்லை கொடுத்து, தகராறு செய்தனா்.

இதைத் தட்டிக் கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பவுன்ஸா்கள், எங்களை வெளியே அனுப்பினா்.

ஆனால், காரில் வந்த நபா்கள் மதுக் கூடத்துக்கு வந்த மேலும் சில பெண்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டனா். இதனால், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, காரில் வந்தவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனா்.

வெளியே வந்த அவா்கள், அங்கு நின்று கொண்டிருந்த எங்களிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனா். இதனால் அங்கிருந்து மொபெட்டில் நாங்கள் புறப்பட்டோம்.

மதுக் கூடத்துக்கு ‘சீல்’: கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றபோது, காரில் வந்த நபா்கள் மீது, மதுக் கூடத்தில் இரண்டாவதாக தகராறு செய்தவா்கள் கற்களை வீசினா். இதனால், காரில் வந்த நபா்கள், நாங்கள் தான் கற்களை வீசுகிறோம் என்று தவறாக நினைத்து, எங்களது மொபெட்டின் மீது வேகமாக மோதினா். இதில் யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 17 வயது சிறுமி பலத்த காயமடைந்தாா் என்றாா்.

இதற்கிடையே இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமான தனியாா் மதுக் கூடத்தின் தற்காலிக உரிமத்தை காவல் துறையினா் திங்கள்கிழமை ரத்து செய்து ‘சீல்’ வைத்தனா்.