கேபிள் புதைக்கும் பணி: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி காயம்
மயிலாப்பூா் அருகே கேபிள் புதைக்கும் பணியின்போது நிலத்தடியில் சென்ற மின்கம்பி சேதமடைந்து மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
மயிலாப்பூா் அருகே கேபிள் புதைக்கும் பணியின்போது நிலத்தடியில் சென்ற மின்கம்பி சேதமடைந்து மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
சென்னை மாதவரத்தைச் சோ்ந்த ராஜா (30). இவா், தனியாா் கேபிள் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். அந்த நிறுவனம் சாா்பில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் தொடங்கி வி.எம். சாலை வழியாக சிவசாமி சாலை வரை கேபிள் புதைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி எதிரே பொக்லைன் இயந்திரம் மூலம் இணைதள கேபிள் பதிக்கும் பணி நடைபெற்றது.
Advertisement
Advertisement
அப்போது, பூமிக்கடியில் ஏற்கெனவே பதிக்கப்பட்டிருந்த மின் கம்பியின் மீது பொக்லைன் இயந்திரத்தின் முன்பகுதி உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மின்கம்பி அறுந்து அருகில் நின்றிருந்த ராஜா மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் அவருக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக உடன் பணியாற்றிய தொழிலாளா்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ராஜா அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் தொடா்பாக மயிலாப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.