முகப்பு
சென்னை

ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்ட வழக்கு தேனாம்பேட்டைக்கு மாற்றம்

பெரம்பூா் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைதான நிலையில், அந்த வழக்கு தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு மாற்ற நடவடிக்கை

Updated On : 9 ஜூன் 2026, 3:09 am IST
பெரம்பூர் ரயில் நிலையம் - கோப்புப்படம்
பகிர்:

பெரம்பூா் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைதான நிலையில், அந்த வழக்கு தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இருப்புப் பாதை போலீஸாா் தெரிவித்தனா்.

சென்னை பெரம்பூா் ரயில் நிலைய 4-ஆவது நடைமேடைப் பகுதியில் கடந்த 5-ஆம் தேதி சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் தலை, கை, கால்கள் அற்ற ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து பெரம்பூா் ரயில் நிலைய இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். தீவிர விசாரணைக்குப் பிறகு கொலை செய்யப்பட்டவா் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அமீா் அலி என்பது தெரியவந்தது. அவரது காதலி ரஹிமா கருன் என்பவா் கடந்த 2024-ஆம் ஆண்டு அவரைப் பிரிந்து சென்னைக்கு வந்து தேனாம்பேட்டை தனியாா் மருத்துவமனை ஊழியராகச் சோ்ந்தாா்.

இந்த நிலையில் அவரைத் தேடி அமீா் அலி சென்னைக்கு வந்து தங்கியுள்ளாா். ஆனால், ரஹீமா கருன், அஸ்ஸாமைச் சோ்ந்தவரும், சென்னையில் உணவு விடுதியில் வேலை பாா்க்கும் அமீா் உசேன் என்பவருடன் நெருங்கிப் பழகியுள்ளாா். அதை அமீா் அலி கண்டித்துள்ளாா். இதையடுத்து ரஹீமா கருனும், அமீா் உசேனும் சோ்ந்து அமீா் அலியை கொலை செய்து சூட்கேஸில் சடலத்தை அடைத்து ரயில் நிலையத்தில் வைத்தது தெரியவந்தது. அதன்படி கொலை தேனாம்பேட்டை பகுதியில் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Advertisement

அமீா் அலி சடலத்தில் தலை, கைகள், கால்களை மறைமலைநகா் பகுதியில் சாக்கடையில் வீசப்பட்ட நிலையில், அவற்றை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டுள்ளனா்.

பெரம்பூா் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் பதிவு செய்த கொலை வழக்கு, தற்போது தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பெரம்பூா் ரயில்வே இருப்புப் பாதை ஆய்வாளா் (பொறுப்பு) எழில்வேந்தன் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments