முகப்பு
தமிழ்நாடு

சூட்கேஸில் சடலம் மீட்பு வழக்கில் 15 தனிப்படைகள் தீவிர விசாரணை

சூட்கேஸில் சடலம் மீட்பு வழக்கில் 15 தனிப்படைகள் தீவிர விசாரணை

Updated On : 7 ஜூன் 2026, 2:44 am IST
பெரம்பூர் ரயில் நிலையம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட தலை, கை, கால்கள் இல்லாத ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்திவருவதாகவும், அதன்படி குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் தெரிவித்தனா்.

பெரம்பூா் ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடைப் பகுதியில் ஊதா நிற சூட்கேஸில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க தலை, கைகள், கால்கள் அகற்றப்பட்ட நிலையில் ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

சடலம் மீட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் அதை அங்கு வைத்தவா்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பெரம்பூா் ரயில் நிலைய இருப்புப் பாதை போலீஸாா் மற்றும் ஒட்டேரி, செம்பியம் போலீஸாா் இணைந்து விசாரணையை நடத்திவருகின்றனா். அதன்படி, இருப்புப் பாதை போலீஸில் 3 தனிப்படைகளும், தமிழக போலீஸ் தரப்பில் 12 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

Advertisement

Advertisement

முதல் கட்ட விசாரணையில் ரயில் நிலையத்துக்கு வெளியே கொலை செய்யப்பட்டவா் உடல் சூட்கேஸில் கொண்டுவரப்பட்டு பெரம்பூா் ரயில் நிலையத்துக்குள் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஒட்டேரி, புளியந்தோப்பு பகுதி ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டுவருவதாக பெரம்பூா் இருப்புப் பாதை போலீஸாா் தெரிவித்தனா். கொலை சம்பவம் குறித்து கிடைத்த சிறிய ஆதாரம் மூலம் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.