சென்னை விமான நிலையத்தில் விரைவில் 10 நவீன ஓய்வறைகள்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இணைப்பு (டிரான்சிட்) விமான பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவா்களுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய 10 நவீன ஓய்வறைகள் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இணைப்பு (டிரான்சிட்) விமான பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவா்களுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய 10 நவீன ஓய்வறைகள் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூா், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும், உள்நாட்டு நகரங்களுக்கும் நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த ஏராளமான பயணிகள் இணைப்பு விமான சேவைகளைப் பயன்படுத்தி சென்னை விமான நிலையம் வழியாக பயணம் செய்கின்றனா்.
Advertisement
Advertisement
குறிப்பாக, சா்வதேச மற்றும் உள்நாட்டு விமான இணைப்புகளுக்கிடையே சில நேரங்களில் 12 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போது விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கான ஓய்வறை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
இதைக் கருத்தில் கொண்டு, தற்போது கட்டப்பட்டு வரும் 3-ஆவது முனையத்தில் முதல்கட்டமாக 10 நவீன ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஓய்வறைகள் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, விமான நிலைய வளாகத்துக்குள் நட்சத்திர ஓட்டல் அமைக்கும் திட்டம் பாதுகாப்பு காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக பயணிகள் ஓய்வெடுத்து தங்கும் வகையிலான இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வறைகளுக்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, வரும் காலத்தில் கூடுதல் எண்ணிக்கையில் ஓய்வறைகள் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.