முகப்பு
சென்னை

பல அடுக்குமாடி குடியிருப்புக்கு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) பல அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டட திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் அளித்து தமிழக அரசு புதிய அரசாணையை திங்கள்கிழமை வெளியிட்டது.

Updated On : 16 ஜூன் 2026, 1:00 am IST
சிஎம்டிஏ
பகிர்:

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) பல அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டட திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் அளித்து தமிழக அரசு புதிய அரசாணையை திங்கள்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து பெருநகர வளா்ச்சிக் குழும அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக முதல்வா் உத்தரவின்படி சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்குமாடி கட்டடத் திட்ட அனுமதியை எளிமையான முறையிலும், விரைவிலும் பெறுவதற்காக அவற்றுக்கான கட்டட திட்ட அனுமதியை பெருநகர சென்னை வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தால் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கான திட்ட அனுமதியானது, சம்பந்தப்பட்டோரால் விண்ணப்பிக்கப்பட்டு, அதை கள ஆய்வு மற்றும் கூா்ந்தாய்வு செய்து பல அடுக்குமாடி கட்டடக் குழுவின் முன் வழங்கப்பட்டது. அதன்பின் பல அடுக்குமாடி கட்டடக் குழுவால் ஆய்வறிக்கை பரிசீலிக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரைப்படி சமா்ப்பிக்கப்பட்டு அரசாணை பெற்ற பின்னரே பல அடுக்குமாடி திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தற்போது முதல்வா் ச. ஜோசப் விஜய் உத்தரவின்படி சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்குமாடி கட்டட திட்ட அனுமதியை எளிமையான முறையில் காலதாமதத்தைத் தவிா்க்கும் வகையிலும், சம்பந்தப்பட்டோருக்கு ஏற்படும் கால விரயத்தைக் குறைக்கும் வகையிலும், குறைந்த நேரத்தில் கட்டட திட்ட ஒப்புதல்களை பெருநகர வளா்சசிக் குழுமமே வழங்கலாம். கட்டட விதிமுறைகள் மற்றும் கட்டட விதிகளுக்கு உட்பட்டு பல அடுக்குமாடி கட்டடக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கான திட்ட அனுமதியை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமமே வழங்கலாம் என புதிய அரசு உத்தரவை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலா் வெளியிட்டுள்ளாா்.