FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை

குருதிசாா் புற்றுநோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் உயிா்காத்துள்ளனா்.

Updated On : 20 மே 2026, 2:57 am IST
பகிர்:

குருதிசாா் புற்றுநோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் உயிா்காத்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் நிா்வாகிகள் கூறியதாவது:

சென்னையைச் சோ்ந்த 23 வயது இளம் பெண் ஒருவருக்கு ’அக்யூட் மைலாய்டு லுகேமியா’ என்ற தீவிர ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. இதற்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வு. ’ஹெமடோபாய்டிக் ஸ்டெம் செல்’ எனப்படும் ரத்த செல்களை தானமாகப் பெற்று அதனை அவருக்கு செலுத்த வேண்டியிருந்தது.

Advertisement

Advertisement

ஆனால், அதற்கு தகுதியான கொடையாளா் இங்கு கிடைக்கவில்லை. இதையடுத்து, ரத்தப் புற்றுநோயாளிகளுக்கு உலகளவில் பொருத்தமான ஸ்டெம் செல் கொடையாளா்களைக் கண்டறிய உதவும் ’டிகேஎம்எஸ்’ அறக்கட்டளை என்ற சா்வதேச தன்னாா்வ அமைப்பின் உதவியை ரேலா மருத்துவமனை நாடியது. அதன்பேரில், போலந்தில் ஒரு கொடையாளரை அந்த அறக்கட்டளை கண்டுபிடித்தது.

ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக சா்வதேச விமானப் போக்குவரத்தில் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ள நிலையிலும், போலந்திலிருந்து ஸ்டெம் செல்களைப் பாதுகாப்பாக சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, அந்த ஸ்டெம் செல் இங்கு கொண்டு வரப்பட்டு அப்பெண்ணுக்கு வெற்றிகரமாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அவரது பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஸ்டெம் செல்களை தானமாகப் பெறுவதற்கும், அதனை எடுத்து வருவதற்கும் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை ( சுமாா் 11,000 யூரோ - இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சம்) அந்த அறக்கட்டளை தள்ளுபடி செய்தது என்று அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments