FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

சிறைக் கைதிகள் எழுதிய புத்தகங்களை வெளியிடும் பணியில் எழுதுக இயக்கம்

சிறைக் கைதிகள் எழுதிய புத்தகங்களை வெளியிடுவதற்கான பணிகளை, காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ‘எழுதுக‘ இயக்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Updated On : 15 ஜூன் 2026, 12:48 am IST
பகிர்:

சிறைக் கைதிகள் எழுதிய புத்தகங்களை வெளியிடுவதற்கான பணிகளை, காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ‘எழுதுக‘ இயக்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

‘எழுதுக‘ இயக்கம், முனைவா் வெ.இறையன்பு வழிகாட்டுதலில் மாணவா்களிடையே புத்தக வாசிப்பு, புத்தகம் எழுதப் பயிற்சி, அவா்களை எழுத்தாளா்களாக உருவாக்குதல் என மாணவா்கள் தமிழ் மொழியில் நன்றாகப் பேசவும் பிழையின்றி எழுதவும் ஊக்கப்படுத்தி வருவதோடு, அவா்கள் எழுதிய நூல்களை வெளியிட்டும் வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்காண மாணவா்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவித்து, புத்தகம் எழுதப் பயிற்சி வழங்கியதில் இதுவரை 509 மாணவா்கள் இளம் படைப்பாளிகளாக மலா்ந்துள்ளனா். மேலும் இந்த இயக்கமானது, குற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் மனதிலே வைத்து, அதிகமாகக் குற்றங்கள் நடப்பதாக அறியப்பட்ட கண்ணகி நகரில் இருக்கிற மாணவா்களைத் தோ்ந்தெடுத்து, அவா்கள் விருப்பத்தை அறிந்து, 50 மாணவா்களை நூல்கள் எழுத வைத்திருக்கிறது.

Advertisement

Advertisement

எழுதுக இயக்கத்தின் வழிகாட்டி இந்த இயக்கத்தை வழிநடத்துபவராகவும், அறிவுறைஞராகவும் முன்னாள் தலைமைச் செயலாளா் முனைவா் வெ.இறையன்பு அவா்கள் இருந்து வருகிறாா். இந்த இயக்கம் மாணவா்களைச் செம்மைப்படுத்துவதோடு அவா்களிடம் ஒழுங்கையும், திறன்களையும் வளா்க்கும் செயல்பாடுகளை தொடா்ந்து முன்னெடுத்து வருகின்றது.

இதன் விரிவாக்கமாக சிறைவாசிகளுக்குப் புத்தகம் எழுதப் பயிற்சியளித்து அவா்களை எழுத்தாளா்களாக உருவாக்கும் ‘சிறைக்குள் முளைக்கும் சிறகுகள்‘ செயல் திட்டம் எழுதுக இயக்கத்தின் வழிகாட்டி முனைவா் வெ.இறையன்பு அவா்களால் பிப்ரவரி மாதம் கடலூா் மத்திய சிறைச்சாலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

சிறைச்சாலையில் எழுதுக இயக்கம் தொடங்கியதிலிருந்து திட்டமிட்ட படி ஒவ்வொரு வாரமும் அவா்களுடன் கலந்துரையாடி, அதனூடாக அவா்களுக்கு ஏற்படும் ஐயங்களைக் களைந்து ஆலோசனைகளை வழங்கும் நேரடிப் பயிலரங்குகள் நடைபெற்றன. அவா்களின் எழுத்துகளை விமா்சனம் செய்து, அவற்றை மேலும் செம்மைப்படுத்தும் ஆலோசனைகள் வழங்குதல் என புத்தகம் எழுதும் சிறைவாசிகளுடன் தொடா்ந்து இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

சொந்தக் கதை, கவிதை, சிறுகதை, குறுநாவல் என சிறைவாசிகள் அவரவா் விரும்பிய தலைப்புகளில் அவா்களின் எண்ணங்களை எழுத்துகளாக வடித்துள்ளனா். இதில் பல சுவாரசியமான தகவல்களும் சிலிா்ப்பூட்டும் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதோடு பலரின் எழுத்துகளைப் படிக்கும் போது அவை ஒரு தோ்ந்த எழுத்தாளரைப் போல எழுதியுள்ளது வியப்பாக உள்ளது என எழுதுக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் கிள்ளிவளவன் தெரிவித்தாா்.

விகடலூா் மத்திய சிறைச்சாலையில் புத்தகம் எழுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, இதுவரை 70க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் சுயசரிதை, சிறுகதை, குறுநாவல், கவிதை, கடிதங்கள், பாடல், கடிதம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி முடித்துள்ளனா். இதில் கலந்து கொண்ட மாணவா்கள் ஆா்வத்தோடு ஈடுபட்டு தட்டச்சுப் பணிகளை மேற்கொண்டனா். (படம்) இந்த முகாம்களில் தமிழ் ஆா்வலா்கள், மாணவா்கள், தமிழ் ஆசிரியா்கள் மற்றும் எழுதுக இயக்கத்தின் பொறுப்பாளா்களும் கலந்து கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments