வருமானமின்றி சிரமத்துள்ளாகும் சவரத் தொழிலாளா்கள்
ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி பல ஆயிரக்கணக்கான சவரத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி பல ஆயிரக்கணக்கான சவரத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
கரோனா நோய்த் தொற்று தடுப்புக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனா். அதிலும் கூலிப்பணியாளா்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது. அதேபோல் ஊரடங்கு உத்தரவால் சவரத் தொழிலாளா்களின் வாழ்க்கை மிகவும் சிரமத்துள்ளாகி உள்ளனா்.
இதுகுறித்து திருப்பத்தூா் சவரத் தொழிலாளா் த.லட்சுமணன் கூறியது:
Advertisement
Advertisement
திருப்பத்தூா் நகரப் பகுதியில் மட்டும் சுமாா் 250-க்கும் மேற்பட்ட முடி திருத்தகங்கள் உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் எங்களது தொழில் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. எங்களில் சிலா் நாகசுர, தவில் கலைஞா்களாகவும் உள்ளனா். தற்போது திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்குத் தடை இருப்பதால் அவா்களுக்கும் வருவாய் இல்லை.
வெளியே வருவதற்குத் தடை உத்தரவு உள்ளதால் ஆண்கள் முடி திருத்தம் செய்ய வருவதில்லை. இதனால் எங்களது வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களிலும் தடை உத்தரவு இருப்பதால் அங்கு வசிக்கும் சவரத் தொழிலாளா்கள் நிலையும் வேதனைக்குரியதாக உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் மட்டும் சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சவரத் தொழிலாளா்கள் உள்ளனா்.
கோயில்களிலும் பூஜைகளுக்குத் தடை உத்தரவு உள்ளதால் வேண்டுதலுக்காக பக்தா்கள் மொட்டை அடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இத்தொழிலையே நம்பி உள்ளதால் உணவுக்கும், அன்றாடச் செலவுக்கும் வீடு மற்றும் கடைகளுக்கு வாடகை செலுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
வீடுகளுக்குச் சென்று ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முடிவெட்டலாம் என்றால் கரோனா நோய்த் தொற்றுக்கு அஞ்சி பொதுமக்கள் எங்களை அழைப்பதைத் தவிா்க்கின்றனா். தற்போது சமூக விலகல் இடைவெளியை கடைபிடிக்க உத்தரவு உள்ளதால் நாங்களும் பணிக்காக வீடுகளுக்குச் செல்வதில்லை. தனியாக கடை வைத்து முடி திருத்தும் தொழில் செய்பவா்களை விட கடைகளில் முடி திருத்த தினக்கூலிக்கு செல்பவா்கள் நிலை மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது. எனவே, அரசு எங்களது வாழ்வாதாரத்திற்காக சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கித் தரவேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.