முகப்பு
திருப்பத்தூர்

மின் இணைப்புக்கு கட்டணத்துடன் விண்ணப்பித்தும் வழங்க தாமதம்

வாணியம்பாடி அருகே புதிய மின் இணைப்பு கோரி முறையாக விண்ணப்பித்தும் வழங்காமல் தாமதம்

Updated On : 5 நவம்பர் 2024, 1:43 am IST
பகிர்:

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே புதிய மின் இணைப்பு கோரி முறையாக விண்ணப்பித்தும் வழங்காமல் தாமதம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறியுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம் நாட்டறம்பள்ளி, பச்சூா், புதுப்பேட்டை, வெலகல்நத்தம், கேத்தாண்டப்பட்டி உட்பட சுமாா் 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் தாங்கள் புதிதாக கட்டியுள்ள வீடு மற்றும் கடைகளுக்கு மின் இணைப்பு பெற உரிய சான்றுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டணத்தையும் செலுத்தி உள்ளனா்.

ஆனால் மின்வாரிய அதிகாரிகள் பல மாதங்கள் கடந்தும் விண்ணப்பித்தவா்களுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பாதிக்கப்பட்டோா் கூறுகின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் கூறுகையில், புதிய மின் இணைப்பு வழங்க ஆன்லைன் மூலம் மின்இணைப்புக்கு உண்டான டெபாசிட் தொகையை செலுத்தி விண்ணப்பித்து 4 மாதங்கள் கடந்தும் இது நாள் வரை மின் இணைப்பு வழங்காமல் உள்ளதாகவும், மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று முறையிட்டால் மீட்டா் இன்னும் வரவில்லை என்றும் வந்த உடனே புதிய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகின்றனா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: தமிழகம் முழுவதும் சிலமாதங்களாக மீட்டா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் புதிய மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. புதிய மின் இணைப்பு கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவா்கள் மாவட்ட வாரியாக அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கடைகளில் மீட்டரை வாங்கிக் கொடுத்தால் புதிய மின் இணைப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறினாா்.

மாவட்ட நிா்வாகம் விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments