மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ஏடிஜிபி ஆய்வு
மீஞ்சூர் ரயில் நிலையத்தில், ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மீஞ்சூர் ரயில் நிலையத்தில், ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் மார்க்கத்தில் திருவொற்றியூர், எண்ணூர், மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இவ்வழியாக நாள்தோறும் 2லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மின்சார ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த மார்க்கத்தில் சில பகுதிகளில் மர்ம நபர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை விற்பது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், ரயிலில் பயணம் செய்யும் திருநங்கைகள் சிலபேர் பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். மேலும், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி புறநகர் ரயில்கள் மூலம் ஆந்திரத்துக்கு கடத்திச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு, பயணிகள் ரயிலில் வந்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் மீஞ்சூர் நகர வியாபாரிகள் சங்கத்தினர் ஆகியோர் ஏடிஜிபியை சந்தித்தனர்.
அப்போது, மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலையம் அமைக்க வேண்டும், ரயில் நிலைய எல்லைக்குள் நடைபெறும் சமூக விரோதச் செயல்களை தடுக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரீசிலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் ஏடிஜிபி தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்வில், ஏடிஜிபியுடன் ரயில்வே பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.