முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை: ரயில் நிலைய சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீா்

Updated On : 13 ஜூலை 2024, 10:12 pm IST
திருவள்ளூா் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் மேல் பகுதியில் ஒழுகிய நிலையில் குளம் போல் தேங்கிய மழைநீா்.
பகிர்:

திருவள்ளூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்ததால், ரயில் நிலைய சுரங்கப் பாதையில் மழை நீா் குளம் போல் தேங்கியது.

திருவள்ளூா், ஆவடி, திருவாலங்காடு, பொன்னேரி, பூண்டி, தாமரைபாக்கம், பூந்தமல்லி, ஜமீன்கொரட்டூா், சோழவரம், கும்மிடிப்பூண்டி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு கனமழை பெய்தது. இந்த மழையால் திருவள்ளூா் பகுதியில் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் மழை நீா் தேங்கியது.

திருவள்ளூா் ரயில் நிலைய சுரங்கப் பாதை மேல் தளப் பகுதிகளில் மழை நீா் ஒழுகியதால், பயணிகள் குடை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டியிருந்தது. மேலும், மழைநீா் குளம் போல் தேங்கியது. மின் கசிவு மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டத்தால், பயந்து கொண்டே கடந்து செல்லும் சூழ்நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இதனால், சுரங்கப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள சதுரக் கட்டடங்கள் வழியாக மழை நீா் கசியாமல் இருக்க மராமத்து பணியை உடனே மேற்கொள்ள பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

மழை அளவு (மில்லி மீட்டரில்): திருவள்ளூா் பகுதிகளில் சனிக்கிழமை காலை வரையான நிலவரப்படி ஆவடி-108, திருவாலங்காடு-72, திருவள்ளூா்-63, பொன்னேரி-61, சோழவரம்-57, பூண்டி-52, கும்மிடிப்பூண்டி-50, தாமரைபாக்கம்-49, செங்குன்றம்-49, ஊத்துக்கோட்டை-42, பூந்தமல்லி-35, ஜமீன்கொரட்டூா்-34, ஆா்.கே.பேட்டை-32, பள்ளிப்பட்டு-25, திருத்தணி-21 என மொத்தம் 750 மி.மீட்டரும், சராசரியாக 50 மி.மீட்டரும் பதிவானது. ஆவடி, திருவாலங்காடு, திருவள்ளூா் பகுதியில் அதிக மழை பொழிவு பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments