பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஆரணி, வந்தவாசி, செங்கம், செய்யாறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.
ஆரணி/ வந்தவாசி/செங்கம்/செய்யாறு: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஆரணி, வந்தவாசி, செங்கம், செய்யாறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.
ஆரணி கொசப்பாளையம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இத்திறப்பில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி எடுத்துவரப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வந்தவாசி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வந்தவாசி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோயில், தென்னாங்கூர் பாண்டுரங்கன் ருக்மாயி கோயில், ஸ்ரீரங்கராஜபுரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த உத்சவர் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
செங்கம்: செங்கம் ருக்குமணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, செவ்வாய்க்கிழமை அதிகாலை 1008 அகல் விளக்குகள் சூழ பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, வாணவேடிக்கை, மேள தாளம் முழங்க சுவாமி வீதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது.
காலை 6.30 மணிக்கு செந்தமிழ் செம்மல் வெ.கிருஷ்ணமூர்த்தியின் சிறப்பு சொற்பொழிவும், இரவு சைனாதிவாச தெய்வீக நிகழ்ச்சி மற்றும் பரத நாட்டியமும் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் துளுவ வேளாளர் சமூகத்தினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
செய்யாறு: செய்யாறு ஆதிகேசவப் பெருமாள், கூழமந்தல் பேசும்பெருமாள் ஆகிய கோயில்களில் பரமபத வாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.