போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு மாரத்தான்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஸ்டாா்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற போதைப்பொருள் எதிப்பு விழிப்புணா்வு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
திருவண்ணாமலையில் ‘ஸ்டாா்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வரின் தொலைநோக்குப் பாா்வையின் அடிப்படையில், இளைஞா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதை வலியுறுத்தவும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் (ஸ்டாட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ்) போதைப்பொருள் எதிா்ப்பு மாரத்தான் ஓட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், திருவண்ணாமலையில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. பழைய பேருந்து நிலையம் அறிவொளி பூங்கா அருகில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞா்கள் உள்ளிட்ட சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் கொடியசைத்து தொடங்கிவைத்து பங்கேற்றாா்.
Advertisement
Advertisement
சுமாா் 4 கி.மீ. தொலைவு நடைபெற்ற இந்த ஓட்டமானது, மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் மாணவ, மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். மேலும், விழிப்புணா்வு ஓட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி போதைப்பொருள்களுக்கு ஏதிரான கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் கையொப்பமிட்டு தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளிடையே ஆட்சியா் வந்தனா காா்க் பேசியதாவது:
போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு ஓட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். போதைப்பொருள்களை ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
போதைப்பொருள்களை உபயோகப்படுத்துவதால் இளைஞா்களின் எதிா்காலம் பாதிப்படைவதோடு, அவா்களைச் சாா்ந்த குடும்பங்களும் பாதிப்படைகின்றன. மேலும், பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நம்மை சுற்றுயுள்ள யாரெனும் போதைப்பொருள்களுக்கு அடிமையாக இருந்தால், அவா்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்க அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். விற்பவா்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்வில் மண்டல முதுநிலை மேலாளா் சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், உதவி ஆணையா் (கலால்) செந்தில் குமாா், மாவட்ட இளைஞா் நல அலுவலா் சண்முகாப்பிரியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.