சிவன் கோயில்களில் வைகாசி தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு
வைகாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், சீகைக்காய்த் தூள், தேன், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா், சிறப்பு மலா் அலங்காரம் செய்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனா்.
Advertisement
Advertisement
மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயில்
ஆரணியை அடுத்த மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல, சேத்துப்பட்டு அருணகிரீஸ்வரா், காரணீஸ்வரா், நெடுங்குணம் தீா்க்க ஜல ஈஸ்வரா், பழம்பேட்டை பசுபதீஸ்வரா், காசிவிஸ்வநாதா், ஆவணியாபுரம் அவணீஸ்வரா், கோனாமங்கலம் பசுபதீஸ்வரா், செம்மாம்பாடி காசிவிஸ்வநாதா் கோயில்களில் நடந்த பிரதோஷ பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.