ஜிஎஸ்டி வரையறைக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுமா? காணொலியில் பிரதமர் மோடி விளக்கம்
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரையறைக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்ய
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரையறைக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் எழுப்பிய கேள்விக்கு காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி "எனது வாக்குச் சாவடி, பலமான வாக்குச் சாவடி' என்ற தலைப்பில் பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி "நமோ' செயலி மூலம் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இதன்படி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென்சென்னை, புதுச்சேரி ஆகிய மக்களவைத் தொகுதி பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் அரியூர் நாராயணி மஹாலில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், வேலூர் மக்களவைத் தொகுதி, வேலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜக வாக்குச் சாவடி முகவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
அப்போது, காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியது:
இந்திய ராணுவத்துக்கு வேலூர் மாவட்டம் அதிக அளவில் இளைஞர்களை அனுப்பி வருவது சிறப்பான செயல்பாடாகும். இதற்காக வேலூர் மாவட்டத்தைப் பாராட்டுகிறேன். மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழக பாஜகவினர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை வாக்குச் சாவடி வரை விரிவுபடுத்த வேண்டும்.
தேர்தலையொட்டி, மத்திய அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இதற்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தகவல் அளிக்கவும், அந்த தகவலை பரப்பவும், அவற்றை மேம்படுத்தவும் வேண்டும். காங்கிரஸ் ஜனநாயகத்துக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. இதையும் மக்களிடம் பரப்ப வேண்டும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுபாஷ், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படுமா? என்று எழுப்பிய கேள்விக்கு, அதை ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும். அதுகுறித்து இப்போது பேச வேண்டாம் என பிரதமர் மோடி பதிலளித்தார். மேலும், முத்ரா திட்டத்தில் ரூ. 50 ஆயிரம் கடன்பெற்று அழகு நிலையம் நடத்தி வரும் பள்ளிகொண்டாவைச் சேர்ந்த லாவண்யாவுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் வி.தசரதன், துணைத் தலைவர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.