FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கண்டி மஹாலை மக்கள் பார்வைக்கு திறப்பதில் இழுபறி: தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு ஒப்படைப்பதில் தாமதம்

வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள கண்டி மஹாலை மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு ஒப்படைப்பதில் தாமதமாகி வருகிறது.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள கண்டி மஹாலை மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு ஒப்படைப்பதில் தாமதமாகி வருகிறது. இதனால், கண்டி மஹாலை மக்கள் பார்வைக்கு திறப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 
வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் கோட்டை கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேலூர் கோட்டை, 1921-ஆம் ஆண்டு மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் வசமானது. 
எனினும், அதற்கு முன்பாகவே வேலூர் கோட்டை வளாகத்தில் ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம், பொதுப்பணித் துறை, பத்திரப் பதிவுத் துறை, காவலர் பயிற்சிப் பள்ளி என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இதனால், கோட்டை முழுவதும் தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு வசமானபோதும் அதிலுள்ள அரசு அலுவலகக் கட்டடங்கள் அந்தந்த துறையின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
பின்னர், அந்த அலுவலகங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்டப்பட்டு படிப்படியாக அவை வெளியே சென்றுவிட்டன. எனினும், அந்த அலுவலகக் கட்டடங்கள் முறையாக மத்திய தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு ஒப்படைக்கப்படாமலேயே உள்ளன. 
இதனால், வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள பல்வேறு பழைமையானக் கட்டடங்களை மக்கள் பார்வைக்கு திறப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதையடுத்து, அந்த கட்டடங்களை தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு ஒப்படைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, மாவட்ட பத்திரப் பதிவுத் துறையின் வசமிருந்த கண்டி மஹாலை தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு ஒப்படைக்கவும், இதையடுத்து அந்த மஹாலை ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் மக்கள் பார்வைக்கு திறக்க இருப்பதாகவும் தொல் பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 
ஆனால், கண்டி மஹாலை தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு ஒப்படைப்பதில் தாமதம் நிலவுவதால் அதை மக்கள் பார்வை திறப்பதிலும் இழுபறி ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இலங்கையை ஆண்ட விக்கிரமராஜசிங்கன் குடும்பத்துடன் கடந்த 1816 பிப்ரவரி 28-ஆம் தேதி ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டையிலுள்ள கண்டி மஹாலில் 17 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தார். 
இந்த வரலாற்றை மக்கள் அறிந்திட கண்டி மஹாலை மக்கள் பார்வைக்கு திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் தொல்பொருள் ஆய்வுத் துறை வசம் வந்துடன் உடனடியாக கண்டி மஹால் மக்கள் பார்வைக்கு திறக்கப்படும்.
இதேபோல், வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள திப்பு மஹால், ஹைதர் மஹால், பேகம் மஹால், பாக்ஷா மஹால், கண்ணி மஹால், கும்சூர் மஹால் ஆகியவையும் தொல்பொருள் ஆய்வுத் துறை வசம் வரவேண்டியுள்ளன. அதற்கான உத்தரவுகளும் கிடைக்கப் பெற்றவுடன் அந்த மஹால்களும் மக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments