ஆசிரியை கண்டித்ததால் அரளி விதை சாப்பிட்டு பள்ளி மாணவிகள் 3 பேர் மயக்கம்
ஆசிரியை கண்டித்ததால் பிளஸ் 2 மாணவிகள் 3 பேர் அரளி விதையை அரைத்து சாப்பிட்டு மயக்கமடைந்தனர். அவர்கள் 3 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியை கண்டித்ததால் பிளஸ் 2 மாணவிகள் 3 பேர் அரளி விதையை அரைத்து சாப்பிட்டு மயக்கமடைந்தனர். அவர்கள் 3 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடி அருகே ஜவ்வாதுமலை தொடரில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜமுனாமரத்தூர் மலைக் கிராமத்தில் வனத்துறையின் சார்பில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக ராமக்கா பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பிளஸ் 2 மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியுள்ளார். அப்போது, மாணவிகளுக்கு பாடத்தில் இருந்து சில கேள்விகளை அளித்து அதற்கான விடைகளை எழுதுமாறு கூறி உள்ளார்.
இதில், மாணவிகள் சிந்து (17), ராஜகுமாரி (16), காவ்யா (17) ஆகிய 3 பேரும் ஆசிரியை அளித்த கேள்விகளுக்கு விடை எழுதாமல், ஆசிரியையிடம் சொல்லாமல் வீட்டிற்கு சென்றுவிட்டார்களாம். பின்னர், புதன்கிழமை காலை பள்ளி நேரம் தொடங்கும் முன் வந்த 3 மாணவிகளை ஆசிரியை ராமக்கா அழைத்து கண்டித்துள்ளார். மேலும், தலைமை ஆசிரியரைப் பார்த்து அவரிடம் நடந்தவற்றை கூறிவிட்டு, மீண்டும் வகுப்புக்கு வருமாறு கூறியுள்ளார். இதனால், பயந்துபோன 3 மாணவிகளும் பள்ளிக்கு வெளியே அரளி விதைகளை அரைத்து சாப்பிட்டுள்ளனர். இதில் வாந்தி, மயக்கமடைந்த மாணவிகளை ஆசிரியர்கள், பொதுமக்கள் மீட்டு ஜமனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வாணியம்பாடி மற்றும் ஜமுனாமரத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.