FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருணாநிதி மறைவு: கோவையில் 2 ஆவது நாளாக கடைகள் அடைப்பு; போக்குவரத்து சேவையும் முடக்கம்

திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து கோவையில் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் கடைகள் அடைக்கப்பட்டன.  அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து கோவையில் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் கடைகள் அடைக்கப்பட்டன.  அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 
திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார். இந்த செய்தி வெளியானவுடன் கோவையில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.  அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. 
இதைத்தொடர்ந்து, கோவை ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 
கோவை மாவட்டம் முழுவதிலும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மொத்தம் 2, 500 போலீஸார்  பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு அண்ணா சிலை அருகே இடம் ஒதுக்க அரசு மறுத்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு கல்வீச்சு, சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை நடைபெற்றன. 
இந்த நிலையில், கோவை மாநகரில் புதன்கிழமை காலை முதலே கடைகள் அனைத்தும் முழுமையாக  அடைக்கப்பட்டிருந்தன. கோவைக் கோட்டத்தில் உள்ள 270 திரையரங்குகளும் மூடப்பட்டன.  அதே போல், டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதச் சம்பவங்களும் தடுக்கப்பட்டன.
புறநகரிலும் கடைகள் அடைப்பு
கோவை புறநகர் மாவட்டம் காவல் எல்லைக்கு உள்பட்ட  மதுக்கரை, கவுண்டம்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, சூலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டது.  கோவையில் இருந்து பாலக்காடு, எர்ணாகுளம், திருச்சூர், பெங்களூரு, மைசூரு போன்ற வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதையடுத்து, கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு 7 மணிக்கு மேல் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டன.  ஆம்னி பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. 
பொள்ளாச்சியில்... 
பொள்ளாச்சியில் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் ஓடவில்லை.  மக்கள் நடமாட்டமின்றி பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு என அனைத்து பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.  பல இடங்களில் கண்ணீர் அஞ்சலி ஊர்வலமும் நடைபெற்றது.
வால்பாறையில்...
கருணாநிதி மறைவையொட்டி வால்பாறையில் கொட்டும் மழையில் மெளன ஊர்வலமும்  இரங்கல் கூட்டமும் நடைபெற்றன.  அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.  அரசுப் பேருந்துகளின் இயக்கமும் நிறுத்தப்பட்டது. அனைத்து தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினரும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்திருந்தனர். 
வால்பாறை காந்தி சிலை முன்பு திமுகவினர் வைத்திருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  எஸ்டேட் தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர். பிறகு, தபால் நிலையத்தில் இருந்து  மெளன ஊர்வலம்  நடைபெற்றது.  அங்கு திமுக தொழிற்சங்கத் தலைவர் செளந்திரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் வி.அமீது (அதிமுக),  கல்யாணி (மதிமுக)  உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments