FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பில்லூர் அணை திறப்பால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: ஆட்சியர் நேரில் ஆய்வு

காரமடையை அடுத்த பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

காரமடையை அடுத்த பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளன. பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குந்தா அணையிலிருந்து சுமார் 30,000 கனஅடி நீர் திறந்து விடப்படுவதால், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  அணையின் பாதுகாப்புக் கருதி நான்கு மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த நீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
இதனால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறையினர் எச்சரித்துள்ளனர். புதன்கிழமை மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 23,000 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.
பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் புதன்கிழமை மேட்டுப்பாளையம் வந்தார். 
 சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் பகுதியில் வெள்ளத்தால் மூழ்கிய காந்தையாற்று தரைமட்டப் பாலத்தையும், லிங்காபுரத்தில் இருந்து வனப் பகுதி வழியே அமைக்கப்படும் தரைவழிப் பாதையையும் அவர் பார்வையிட்டார். 
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சியிலுள்ள சாமண்ணா நீரேற்று நிலையத்தையும், அப்பகுதியில் ஆற்றோரம் நீரில் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். 
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிசந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், சார் ஆட்சியர் கார்மேகம்,     உதவி ஆட்சியர் (பயிற்சி) சினேகா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சந்திரசேகரன், வட்டாட்சியர் புனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் லதா உள்பட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments