கேரள நிவாரணத்துக்கு அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்: முதல்வர்
கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு முதல்வர், அதிமுக அமைச்சர்கள், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம்
கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு முதல்வர், அதிமுக அமைச்சர்கள், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் நிவாரண நிதியாக அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கனமழை காரணமாக கோவை மாவட்டம், வால்பாறையில் பல்வேறு இடங்களில் சாலைகள், வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்படைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இரண்டு அல்லது மூன்று நாள்களில் கடைமடையை சென்றடையும். இதனைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் செல்லாத பகுதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் 500 டன் அரிசி, பால் என பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதே போல பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருள்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக மக்கள் தங்களால் முடிந்த அளவு உதவ முன்வர வேண்டும். மேலும், முதல்வர், துணை முதல்வர், அதிமுக அமைச்சர்கள் , சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்க உள்ளோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.