கோவையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
நிலுவையில் உள்ள பணப் பலன்களை வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற போக்குவரத்துத்
நிலுவையில் உள்ள பணப் பலன்களை வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் போக்குவரத்துக் கழக அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் கோவை மண்டலத் தலைவர் பழனிசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கத் திரண்டனர். அப்போது, போக்குவரத்துக் கழக அலுவலக நுழைவுவாயில் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஒப்பந்தப்படி (2010ஆம் ஆண்டு) உயர்த்தப்பட்ட பணிக் கொடை வித்தியாசத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி 40 சதவீத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும். பஞ்சப்படி உயர்வை கணக்கிட்டு பணிக்கொடை வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். சாலைப் போக்குவரத்து நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட தொகையை திரும்ப வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்போராட்டத்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வராஜ், ஈரோடு மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னின்று நடத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.