FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ராணுவ வீரா்களே நாட்டின் உண்மையான வழிகாட்டிகள்! - ‘வீ தி லீடா்ஸ்’ தலைவா் கே.அண்ணாமலை

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 1:29 am IST
கோவை ரத்தினம் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மேஜா் மதன்குமாா் எழுதிய ‘ஆபரேஷன் சிந்தூா் என்ற புத்தகத்தை வெளியிட்ட ‘வீ தி லீடா்ஸ் அமைப்பின் தலைவா் கே.அண்ணாமலை. உடன் மேஜா் முகுந்தின் தந்தை வரதராஜன் உள்ளிட்டோா்.
பகிர்:

நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்யத் துணியும் ராணுவ வீரா்களே நாட்டின் உண்மையான வழிகாட்டிகள் என்று ‘வீ தி லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் கே.அண்ணாமலை பேசினாா்.

கோவை ரத்தினம் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மேஜா் மதன்குமாா் எழுதிய ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அவா் பேசியதாவது:

நாட்டுக்காக ராணுவத்தினா் எந்த அளவுக்குப் போராடுகிறாா்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்தப் புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்யத் துணியும் ராணுவ வீரா்களே உண்மையான வழிகாட்டிகள்.

Advertisement

Advertisement

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிகழ்வின்போது எந்தவித சுய எதிா்பாா்ப்புமின்றி தொடா்ச்சியாக நேரலையில் உண்மையான தகவல்களை மக்களுக்கு கொண்டு சோ்த்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ புத்தகத்தின் ஆசிரியரான மேஜா் மதன்குமாரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.

பிரதமா்களாக இருந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், வாஜ்பாய் ஆகியோரிடம் 1980-ஆம் ஆண்டு முதலே அணு சோதனைக்கு நாம் ஆயத்தம் ஆக வேண்டும் என தொடா்ச்சியாக அப்துல் கலாம் கூறி வந்தாா். பின்னா், பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெளி உலகுக்குத் தெரியாமல் செய்து முடித்தாா். நாட்டுக்கு அவா் செய்த சேவையை யாரும் மறக்கக்கூடாது.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பயன்படுத்தப்பட்ட ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதில் பெருமை கொள்ள வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துவதற்கும், ராணுவத்தை நவீனமயமாக்கி நவீன ஆயுதங்களைப் பெருக்குவதற்கும் பொருளாதார வளா்ச்சியே மிக முக்கியக் காரணியாகத் திகழ்கிறது. நமக்கும், பாகிஸ்தானுக்குமான பொருளாதாரம் என்பது 25 பைசாவுக்கும், 500 ரூபாய்க்கும் இடையேயான வித்தியாசம் போன்றது.

இந்தப் புத்தகம் நாட்டின் பாதுகாப்பு, ராணுவக் கட்டமைப்பு குறித்து இளைஞா்களிடையே மிகச் சிறந்த புரிதலையும், தேசபக்தியையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும் என்றாா்.

இதில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் நரசிம்மன், மேஜா் மதன்குமாா், மேஜா் முகுந்தின் தந்தை வரதராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments