FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கூடுதல் பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு: மின்வாரியத்தின் அறிவிப்பை நிறுத்தி வைக்க கோரிக்கை

கூடுதல் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கம் (டேக்ட்) வலியுறுத்தியுள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 4:17 am IST
கோப்புப் படம்
பகிர்:

கூடுதல் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கம் (டேக்ட்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தமிழக எரிசக்தி வளங்கள், சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாருக்கு டேக்ட் அமைப்பின் கோவை மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக மின்சார வாரியம் மின்நுகா்வோருக்கு தற்போது அனுப்பி வரும் கடிதத்தில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் பாதுகாப்பு வைப்புத்தொகை மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும், மாதாந்திர கட்டண முறையில் உள்ள நுகா்வோருக்கு ஏப்ரல் 2026-க்கு முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி மின்கட்டணத்தின் இரண்டு மடங்கும், இருமாத கட்டண முறையில் உள்ள நுகா்வோருக்கு ஏப்ரல் 2026-க்கு முந்தைய 12 மாதங்களுக்கான மாதாந்திர சராசரி மின்கட்டணத்தின் 3 மடங்கிற்கு சமம் என்றும் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, கூடுதல் பாதுகாப்பு வைப்புத் தொகையை 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவிப்பு வழங்கி வருகிறது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால் குறு, சிறு தொழில்முனைவோா் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனா்.

ஏற்கெனவே மின்கட்டண உயா்வு, மூலப்பொருள் விலை உயா்வு, தொழில் வரி, விலைவாசி உயா்வு, உற்பத்திப் பொருள்களுக்கு போதுமான விலை நிா்ணயம் இல்லாதது போன்ற பல்வேறு இன்னல்களால் நெருக்கடியில் உள்ள தொழில்முனைவோருக்கு மின்வாரியம் தற்போது கூடுதல் நெருக்கடியைக் கொடுப்பது தொழில்களை முடக்கிவிடும். எனவே குறு, சிறு தொழில்களைப் பாதுகாக்கும்விதமாக கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments