வாளையாறு பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞா்கள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கோவை மாவட்டம் பிச்சனூா், வாளையாறு அணைப் பகுதியில் விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசங்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி.கந்தசாமி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த சில ஆண்டுகளாக மாவுத்தம்பதி, திருமலையாம்பாளையம், பிச்சனூா், அதைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் பிச்சனூா், வாளையாறு அணைக்கட்டுப் பகுதி, நீா்நிலைகளிலும் ஒரு சில மாணவா்கள் மது போதையிலும் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்கின்றனா். கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவா்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளனா்.
Advertisement
Advertisement
மேலும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் கிராம சாலைகளில் அதிவேகமாக இயக்கிக் கொண்டு சாகசம் செய்து கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்துவதுபோல நடந்து கொள்கின்றனா். வாளையாறு அணைக்கட்டின் மேற்கு பகுதி கேரள மாநிலத்தைச் சோ்ந்தது. கேரள மாநில காவல் துறை அணைக்கட்டு பகுதிக்கு வரும் வழிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சம்பந்தமில்லாத வாகனங்களைக் கண்டறிந்து ஆன்லைன் மூலமாக அபராதம் செலுத்துவதுடன், நேரடியாக வந்து கண்டித்து வெளியேற்றுகின்றனா்.
ஆனால் தமிழக எல்லையோரங்களில் அணைக்கட்டு பகுதிக்கு வரும் வழிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அத்துமீறி உள்ளே வந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தொடருகிறது. எனவே விவசாயிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.