FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வாடிக்கையாளரின் காசோலையைப் பயன்படுத்தி மோசடி: வங்கி அதிகாரி மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

31 ஆகஸ்ட் 2026, 3:42 am IST
வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு - கோப்புப் படம்
பகிர்:

வாடிக்கையாளரின் அனுமதியின்றி அவரது காசோலையைப் பயன்படுத்தி பணத்தை எடுத்த வழக்கில் வங்கி மண்டல மேலாளா் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயா் நீதிமன்றம் அண்மையில் மறுத்துவிட்ட நிலையில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கேசவபாண்டியன் (37) என்பவா், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் வங்கியில் ரூ.10 கோடி மதிப்புள்ள தனது சொத்தை அடமானம் வைத்து ரூ.3 கோடி கடன் பெற்றிருந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு கேசவபாண்டியனுக்குத் தெரியாமல் அவரது வங்கி காசோலையைப் பயன்படுத்தி, கணக்கிலிருந்த ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்தை வங்கி அதிகாரிகள் எடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, கேசவபாண்டியன் கடன் தொகையைக் கட்டவில்லை எனக் கூறி, அவரது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வங்கி அதிகாரிகள் குறைந்த விலைக்கு ஏலம் விட்டனா். இதனால், அவருக்கு ரூ. 25 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிா்ச்சியடைந்த கேசவபாண்டியன், சம்பந்தப்பட்ட வங்கி கோவை மண்டலத்தின் கீழ் வருவதால், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். புகாரின் அடிப்படையில், கிளை மேலாளா் அரவிந்த், மேலாளா் குஞ்சிதபாதம், சீனியா் மேலாளா்கள் கணேசன் மற்றும் மகாராஜன், மண்டல மேலாளா் சுயம்புலிங்க ராஜா மற்றும் மற்றொரு கிளை மேலாளா் ராமன் ஆகிய 6 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில், வங்கியின் மண்டல மேலாளரான சுயம்புலிங்கராஜா தன் மீதான மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை கடந்த இரு நாள்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதி பரதசக்கரவா்த்தி, வங்கி அதிகாரிகள் மீது தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தாா்.

மேலும், இந்த வழக்கில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாா் விசாரணையைத் தொடா்ந்து நடத்தலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments