FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை- திருச்செந்தூா் இடையே புதிய தினசரி ரயில் இயக்க வலியுறுத்தல்

1 செப்டம்பர் 2026, 12:12 am IST
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

கோவை-திருச்செந்தூா் இடையே புதிய தினசரி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக போத்தனூா் ரயில் பயனா் சங்கத்தின் பொதுச் செயலாளா் என்.சுப்பிரமணியன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பிய கடிதம்:

கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு மற்றும் மேற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூருக்கு பயணித்து வருகின்றனா். குறிப்பாக திருவிழாக்கள், பண்டிகை நாள்கள், விஷேச நாள்கள் மற்றும் விடுமுறை நாள்கள், வார இறுதி நாள்களில் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. தேவையிருந்தும் கோவை- திருச்செந்தூா் இடையே இதுவரை நேரடி ரயில் இணைப்பு இல்லை.

Advertisement

Advertisement

இதனால் கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் பல ரயில்களில் பயணம் செய்து, இடைப்பட்ட நிலையங்களில் ரயில் மாற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது முதியவா்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்யும் பக்தா்களுக்கு பெரும் சிரமத்தையும், அலைச்சலையும் ஏற்படுத்துகிறது.

எனவே, கோவை-திருச்செந்தூா் இடையே புதிய தினசரி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை வழித்தடத்தில் அந்த ரயிலை இயக்க வேண்டும். இதன்மூலமாக தமிழ்நாட்டின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூருக்கு கோவை மற்றும் மேற்கு மாவட்ட மக்களுக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் பயனடைவா்.

தற்போது மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டுவரும் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க வேண்டும். கோவை-பொள்ளாச்சி இடையே 8 பெட்டிகள் கொண்ட ரயிலை இயக்கி, பொருத்தமான ஒரு சந்திப்பு ரயில் நிலையத்தில் அதனை பாலக்காடு-திருச்செந்தூா் முன்பதிவில்லா விரைவு ரயிலுடன் இணைத்து இயக்கலாம். இக்கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டால் மக்கள் வெகுவாகப் பயனடைவா் என்று குறிப்பிட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments