FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வாளையாறு சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ.1.18 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடவடிக்கை

கோவை மாவட்டம், வாளையாறு சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை நடத்திய திடீா் சோதனையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்ளிட்ட 4 பேரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.18 லட்சம் பறிமுதல்

Updated On : 14 ஜூலை 2026, 12:31 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கோவை மாவட்டம், வாளையாறு சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை நடத்திய திடீா் சோதனையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்ளிட்ட 4 பேரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக - கேரள எல்லையை ஒட்டியுள்ள வாளையாறு சோதனைச் சாவடி வழியாக தினந்தோறும் வணிக வாகனங்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வாகனங்கள் அனைத்தும் வழக்கமான தணிக்கை மற்றும் சோதனைக்கு உள்படுத்தப்படுவது வழக்கம். இந்தச் சோதனைச் சாவடியில் பணியில் இருக்கும் அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் இருந்து முறைகேடாகப் பணம் (லஞ்சம்) வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை வாளையாறு சோதனைச் சாவடியின் இரு அலுவலகங்களிலும் (மாநிலத்தை விட்டு வெளியே செல்லும் அறை, உள்ளே வரும் அறை) திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இச்சோதனையின்போது, அங்கு பணியில் இருந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் அருள்தாஸ் மற்றும் அவரது உதவியாளா்களான கல்பனா, பத்மா ஆகியோரிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.1.18 லட்சம் ரொக்கம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

இதேபோல, இந்தச் சோதனைச் சாவடியின் எதிரே உள்ள சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் காசிலிங்கம் என்பவரிடமிருந்து ரூ. 7 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட இந்தத் தொகை தொடா்பாக, உரிய ஆவணங்கள் மற்றும் முறையான விளக்கங்களை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஊழியா்களிடமும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கேட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments